மலைக்கோயிலில் சுப்ரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி #வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.
அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் குமரி வள்ளி-க்கு சன்னதி இருக்கிறது.
இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார்.
எனவே முருகன் வேங்கை மரமாக #உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
பெரும்பாலும் கோயில்களில் தேரோட்டம் ஒரு நாளில் முடிந்து விடும். ஆனால் இத்தலத்தில் தேர், நான்கு நாட்கள் ரதவீதி (மலைப்பாதை) சுற்றி நிலைக்கு வருகிறது.
வழியில் வேடுவ மக்கள் தங்கள் வீட்டுப்பெண்ணான வள்ளிக்கு #சீதனமாக அரிசி, வெல்லம், தானியம், காய்கறி, தேங்காய், பழம், ஆடைகள் கொடுக்கின்றனர்.
விழாவின் கடைசி நாளன்று (மாசி பவுர்ணமி) வள்ளி கல்யாணம் நடக்கிறது. அப்போது வேடுவர் குலத்தினர் தேன், தினைமாவினை தங்கள் #மருமகனான முருகனுக்கு படைக்கின்றனர்.
முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. ஆடிக்கிருத்திகையை ஒட்டி நான்கு நாட்கள் #தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது சுவாமி, சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார்.
முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் #திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது.
வேலூரில் இருந்து 25 கி.மீ தூரத்தில் வள்ளிமலை இருக்கிறது.