Breaking News :

Monday, February 10
.

ஸ்ரீ காலபைரவாஷ்டகம் பூஜை பலன்கள்?


1.   காசிநகர் வாழ் காலபைரவா! நின் மாண்பினைப் பாடுகிறேன் – நினது தாமரைப் பாதங்களில் தேவேந்திரன் வந்து பணிந்து வணங்குகிறான்;  நீ அணிகின்ற யக்ஞோபவீதமோ நச்சினைக் கக்கிடும் அரவம் அன்றோ; நினது சடாமுடியை அலங்கரிப்பதோ பாலொளிவீசும் முழுநிலவு; அருட் பார்வையை அள்ளி வீசும் நினது ஒளிவீசும் நயனங்கள்; நாரத முனிவரும் ஏனைய இசை வாணர்களும் நயம்பட இசைக்கும் புகழுடையாய்; திக்குகள் அனைத்தையும், ஆடையாய் அணிந்த எழிலுறு மேனியனே! நின்னைப் பாடுகின்றேன்.

 2.   காசி நகராளும் காலபைரவா! நின் புகழை என் நாவால் உரக்கப் பாடுகின்றேன். கோடி சூரியர் நாடிய ஒளிக்கதிர் வீசிடும் ஞாயிறே; மீண்டும் மீண்டும் வந்து பிறக்கும் கேட்டினை அழிப்பாய்; பிரபஞ்சத்தின் அதிபதியே நீலகண்டா! எங்கள் பெற்றியைப் போற்றி வரம் தரும் கருணையே; முக்கண் உடைய மூலப் பரம்பொருளே; காலனையழித்த கருணை வள்ளலே; தாமரைக் கண்ணா; அழிவற்ற ஆயுதம் கரங்களில் தாங்கிய கருணையே நீதான் நிலையானவன்.

3.   காசி நகரையாளும் காலபைரவா நின் புகழினைப் பாடுகின்றேன். கடிந்திடும் கோடரி கைக்கொண்டு, பாசக் கயிற்றினை பற்றிய கையுடன், இப்புவனந்தனை படைத்துக் காத்திடும் பேரருள் கருணையே! சாம்பல் பூசிய கவின்மிகு உடலுடன், தேவாதி தேவா தேவருள் தலைமையே! அழிவினை அழிக்கும் அழியாச் செல்வமே; நோய்நொடிதனையே நெருங்காமல் செய்து உடல்நலம் காக்கும் உத்தமத் தலைவா! வலிமையனைத்தும் ஒருங்கே கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்து, சிற்சபைதனிலே தாண்டவமாடும் தனிப்பெரும் இறைவா!

 4.   காசி நகராளும் காலபைரவரைப் புகழ்வேன்! மனதில் தோன்றும் விருப்புகளையும், அதனை அடையும் மார்க்கங்களையும் காட்டி அருள்புரியும் தேவா! மனதை கொள்ளை கொள்ளும் எழிலுடை தோற்றமுடையாய்! பணிவோர் தம்மை பரவசப்படுத்தும் கருணைக் கடலே! நிரந்தரப் பொருளே! பல்லிடந்தோறும் பற்பல தோற்றம் பயின்றிடும் தேவே! இடையில் ஒளியுமிழ் பொன்னணியுடனே மணிகள் ஒலிக்க நடமிடும் இறைவா!

5.   காசி நகரில் கருணை வழங்கும் காலபைரவர் புகழினை இசைப்பேன். நேர்மை வழிதனை நிலைத்திடச் செய்வோன்; அறவழி பிறள்வோரை அழித்திடும் காலன்; கர்ம வினைகள் விளைத்திடும் செயல்கள் அனைத்தையும் அழித்துக் காப்போன்; அளிக்கும் நலன்களை அடக்கமோடு அளிப்போன்; அற்புதத்திலும் அற்புதமானவன்; அணியும் அணிகலன் அனைத்தும் ஒளிருகின்றன பொன்னின் நிறத்தில்.

6.   காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன்; பொன்னாலான காலணி இரண்டும் மின்னிடும் கால்களை யுடையோன்; நிரந்தரமானவன்; ஈடில்லை இவருக்கு மாற்றார் எவரும்; விரும்பியதனைத்தையும் விரைந்து அருள்பவன்; தனக்கென விருப்பம் எதுவும் இலாதவன்; இறப்பையும் வென்ற மேலோனாவன்; ஆன்ம விடுதலையைத் தன் பற்களால் தருபவன்

7.   காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன். படைப்புத் தேவன் தாமரைச் செல்வன் பிரம்மன் படைத்த அனைத்தையும் தன் கர்ஜனையால் மட்டுமே உடைக்கும் ஆற்றல் படைத்தோன்; பாவங்கள் அனைத்தையும் தன் கருணைப் பார்வையால் கருகிடச் செய்வோன்; ஆள்பவரில் இவனே ஆண்மையாளன் எனும் பெருமையைப் பெற்றோன்; அட்டாங்க சித்தி* அருளும் பெரியோன்; கபால மாலையை அணிந்திடும் பெற்றியன். (*அட்டாங்க சித்தி என்பது: அனிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா, ஈசத்வா, வசித்வா எனும் சித்திகளாம்)

 8.   காசி நகராளும் கற்பகமாம் காலபைரவரைப் பாடுகின்றேன். பேய்க்கணங்கள் அனைத்துக்கும் அதிபதியானவனே! அளவற்ற புகழினை அள்ளித் தெளிப்பவனே! காசியில் வாழ்வோர் பிணிகளை நீக்கி, பாவங்கள் போக்கி பவித்திரமாய்ச் செய்வோனே! ஒளிமயமானவனே! நல்வழி காட்டிடும் நலம் தரும் நாயகனே! காலத்தை வென்ற நிரந்தரமானவனே! பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து வழிநடத்தும் வல்லோனே! நின் பாதம் பணிகின்றேன்.

 காலபைரவரின் புகழ்பாடும் இவ்வெட்டு வசீகரப் பதிவினையும் படித்து ஆன்ம விடுதலை எனும் அரும்பொருளை உணர்ந்தோர் எல்லோரும், பாவ வழி மறந்து நற்செயல்கள் புரிந்து, துக்கம் அழிந்து, பற்றும் பாசமும் ஒழித்து, ஆசையும், கோபமும் துறந்து பரம்பொருளாம் காலபைரவரின் பாதரவிந்தங்களை அடைவர் என்பது திண்ணம்.

காலபைரவர் காசியில் கோயில்கொண்ட ஈசனின் அச்சம்தரும் அம்சமாகும். காசி நகரைத் தன் கருணைப் பார்வையால் ஆண்டுவரும் பெரியோன். ஒரு முறை படைக்கும் கடவுளாம் பிரம்மன் சிவபெருமானை கேலிசெய்யும் முகத்தான், தன் ஐந்தாம் முகத்தால் ஏளனமாய்ச் சிரித்தான். சினங்கொண்ட பரமசிவனார் காலபைரவர் எனும் உருவெடுத்துக் கோபத்துடன் சிரித்த அந்த பிரம்மனின் ஐந்தாம் தலையைக் பிய்த்தெறிந்தார். இதனைக் கண்ட மகாவிஷ்ணு சிவனுடைய கோபத்தைத் தீர்த்துவைத்து தவறிழைத்த பிரம்மனை மன்னித்துவிடச் செய்தார். பிரம்மனின் சிரத்தைக் கொய்த அந்த பிரம்மஹத்தி தோஷம் மட்டும் காலபைரவரைத் தொடர்ந்து கொண்டிருந்தது பிரம்மனின் துண்டித்த தலையோடு. பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட காலபைரவர் காசி புண்ய க்ஷேத்திரத்தினுள் நுழைந்தார். புண்ணியம் கோலோச்சும் அந்த காசி நரினுள் அந்த பிரம்மஹத்தி தோஷம் நுழைய முடியவில்லை. உள்ளே நுழைந்த காலபைரவர் காசி நகரின் கோட்டைக் காவலராக நியமனமானார். கோட்டைப் பாதுகாவலுக்காக காலபைரவர் நாயின் முதுகிலேறிப் பயணம் செய்தார். காசி புண்ணியத் தலம் செல்லும் எவரும் காலபைரவர் ஆலயத்திற்குச் சென்று வணங்காவிடில் அவர்தம் தலயாத்திரை பூர்த்தியாவதில்லை.

மற்றுமொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அது தட்சயக்ஞத்தின் போது வீரபத்திரர் தாட்சாயினியின் தன்தை தட்சனின் தலையைக் கொய்து விடுகிறார். சிவபெருமானுக்கு ஆஹுதி கொடுக்காமல் யக்ஞம் செய்யமுயன்ற தட்சனுக்கு அவர் கொடுத்த தண்டனை அது. தாட்சாயினியின் உடல் எட்டு பாகங்களாக நாடு முழுவதும் தூவப்பட்டு அவை சக்தி பீடங்களாக ஆயின என்பதும் ஒன்று. அப்படி உருவான சக்தி பீடங்கள் ஒவ்வொன்றின் வெளியிலும் காலபைரவருக்கு ஆலயம் உண்டு. மற்றொரு விளக்கம் இதோ: காலம் என்பது நேரத்தைக் குறிக்கும். சிவபெருமான் காலத்தை அளந்தவன், காலத்தை ஆள்பவன். தனக்குக் கிடைத்த காலத்தை, அல்லது நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய இறைவனைத் தொழுகிறான். அந்த இறைவனே காலபைரவர் என்கிறது இன்னொரு செய்தி.

 மற்றொரு நம்பிக்கை: சிவாலயங்களுக்குக் காவலாக இருப்பவர் காலபைரவர். நித்திய பூசனைகள் முடிந்தபின்னர் சிவாலயங்களைப் பூட்டி அதன் சாவியை பைரவரிடம் கொடுத்துவிட்டு மறுநாள் ஆலயத்தைத் திறக்க அவரிடமிருந்து சாவியைப் பெறுவார்களாம். இந்த “காலபைரவாஷ்டகம்” எனும் ஸ்தோத்திரம் சம்ஸ்கிருதத்தில் ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது என்கின்றனர். இந்த ஸ்லோகங்கள் இப்போதும் காசியில் உள்ள காலபைரவர் ஆலய சந்நிதியில் பாடப்படுகின்றன. பிரம்பு ஒன்றினால் பக்தர்களை மெல்லத் தட்டி ஆசி வழங்கி இந்த ஸ்லோகம் சொல்லப்படுகிறதாம்.

. (தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் மார்க்கத்தில் திருக்கண்டியூர் எனும் அட்டவீரட்டான தலமொன்று உண்டு. இங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு “பிரம்ம சிரக்கண்டீசர்” என்று பெயர். இவ்வாலயத்துக்கு எதிரே ஒரு பெருமாள் கோயில். அங்கிருக்கும் மூர்த்தம் “ஹரசாப விமோசனப் பெருமாள்” என்பதாகும்.)

காலபைரவ அஷ்டகம் - KALABHAIRAVA ASHTAKAM
தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்.
வ்யால யஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்.
நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
பானு கோட்டி பாஸ்வரம் , பவாப்தி தாரகம் பரம்.
நீலகண்ட மீப்சிதார்த்த தாயக்கம் திரிலோஷனம்.
கால கால மம்புஜாக்ச மக்ஷ சூழ மக்ஷரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
சூல தண்ட பாச தண்ட பாணி மாதி காரணம்.
ஷ்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம்.
பீம விக்ரமம் பிரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
புக்தி முக்தி தாயக்கம் பிரசஷ்த சாரு விக்ரகம் ,
பக்த வத்சலம் சிவம். சமஸ்த லோக விக்ரகம்.
விநிக்வணன் மனோக்ன ஹேம கிண்கிணி லசத் கடீம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
தர்ம சேது பாலகம் த்வ தர்ம மார்க்க நாசகம்.
கர்ம பாச மோச்சகம் சுஷர்ம தாயக்கம் விபும்.
சுவர்ண வர்ண சேஷ பாச ஷோபிதாங்க மண்டலம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
ரத்ன பாதுக பிரபபிராம பாதயுக்மகம்.
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்.
ம்ருத்யு தர்ப்ப நாசனம் கராலடம்ஷ்ற்ற மோக்ஷனம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்.
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்.
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
பூத சங்க நாயகம் , விசால கீர்த்தி தாயகம்.
காசி வாச லோக புண்ய பாப ஷோதகம் விபும்.
நீதி மார்க்க கொவிதம் புராதனம் ஜகத்பதிம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
காலபைரவாஷ்டகம் படந்தி யெ மனோகரம்.
ஞான முக்தி சாதகம் விசித்ர புண்ய வர்த்தனம்.
சோக மோக தைன்ய லோப கோப தாப நாசனம்.
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி சந்நிதிம் த்ருவம்.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.
காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே
ஒம்
 ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.