அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும். அப்பராசக்தியே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களிலும் குடிகொண்டுள்ளாள். அச்சக்தியே கொங்கு நாட்டின் வடமேற்கு எல்லை அருகில் மைசூர் செல்லும் பாதையில் பிரதானமாக வீற்றிருக்கும் பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.
இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகளும், காட்டுப்பன்றிகளும், மான்களும், நரிகளும், வண்ண மயில்களும், குரங்குகளும், முயல்களும், கரடிகளும் மற்றும் மிகக் கொடிய விஷ ஜந்துகளும் சர்வ சாதாரணமாக உலாவும். இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளாள்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும். இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது.
திம்பம் மலையின் அடிவாரம் அன்னை பண்ணாரி அம்மனின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகிற்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
இச்சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப் பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள்.
பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.
ஒரு பட்டியிலிருந்து காரம்பசு (மாடு) ஒன்று கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்பவன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று கவனித்தான்.
அப்பசு தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான்.
இந்நிகழ்ச்சியை பார்த்த அவன் மறுநாள் சுற்றுவட்டார கிராம மக்கள் ஊர்ப் பெரியவர்களிடமும் விவரத்தைச் சொல்லி அனைவரையும் அழைத்துக்கொண்டு மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரம்பசு பால் சொரிவதைக் காண்பித்தான்.
அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியினைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்கள். இதுதெய்வத்தின் திருவிளையாடல் என்று எண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள்.
மக்கள் அனைவரும் அவ்விடத்தை சுத்தம் செய்யும் போது கணங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்கத் திருவுருவும் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள்.
அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கை சூழலில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் எனப்போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார்.
அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணங்குப்புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்பு ஊர் மக்கள் அன்னையின் சிறப்பு கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோவில் அமைத்து பத்மபீடத்துடன் திரு உருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
பண்ணாரி அம்மன் கோவிலின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.....
* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள்.
* இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும்.
* குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும்.
* இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
* தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல.
* மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
* இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.
* முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
* இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.
* முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 3 சக்கர நாற்காலிகள் உள்ளன. நுழைவு வாயிலில் இருந்து சன்னதியை எளிதில் சென்றடையும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
* இக்கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பாக 12 முடிநீக்கும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக முடி எடுக்கப்பட்டு வருகிறது.
* இக்கோவிலின் மேற்குபகுதியில் பவானிசாகர்-பண்ணாரி சாலையில் மருத்துவ மையம் துவங்கப்பட்டு அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது. இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சுழற்சிமுறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
* முடிகாணிக்கை மண்டபத்திற்கு அருகில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக குளியலறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முடிகாணிக்கை செலுத்தும் குழந்தைகளுக்கு முடி காணிக்கை மண்டபத்தில் சுடுநீர் எந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
* நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தேங்காயைப் போல உருண்டு திரண்டு உள்ளன. தேங்காய் சிதறுவது போல நமது பாவங்களும் சிதறுண்டு போகவே நாம் கோவிலில் சிதறுகாய் உடைத்து வழிபடுகிறோம்.
* இறைவன் கல்பகாலம் முடிந்து மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்போது முதன் முதலில் தண்ணீரையே தோற்றுவிக்கிறான். அதனை நினைவு படுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே தெப்ப உற்சவம்.