Breaking News :

Friday, May 17
.

மாசி மாத மகா சிவராத்திரி விசேஷம் ஏன்?


சிவ பெருமான், அனைத்திற்கும் தலைவனாக விளங்கக் கூடியவர். பழமைக்கும் பழமையானவர் என்றும் புதுமைக்கும் புதுமையானவர் என்றும் அழைப்படுகிறார். ஆரம்பமும், முடிவும் இல்லாதவர். சிவனின் பெருமைகள் பற்றியும், சிவ பூஜையின் மகிமை பற்றியும் அனைத்து புராணங்களும் சொல்கின்றன. சிவனின் குணம், தன்மை இது தான் என்பதை சொல்லும் ருத்ர மந்திரத்தின் பலனையும், பொருளையும் ஆயிரம் நாக்குகள் கொண்டு ஆதிசேஷனால் கூட சொல்ல முடியாது என பத்மபுராணம் சொல்கிறது.

பிரம்மனாலும், விஷ்ணுவாலும் கூட அடி முடி காணமுடியாத ஜோதி வடிவாக இருக்கக் கூடியவர் சிவ பெருமான். சிவ சிவ என்ற சொன்னாலே பாவங்கள் நீங்கி, நன்மைகள் பெருகும் என்கிறார்கள். அத்தகைய மகிமை வாய்ந்த அந்த சிவம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம், ஏன் இந்த திருநாமத்தால் சிவ பெருனை அழைக்கிறோம். பல மாதங்கள் இருக்கையில் சிவனுக்குரிய மாதமாக மாசி மாதத்தை மட்டும் ஏன் சொல்லுகிறோம், இந்த மாதத்தில் வரும் சிவராத்திரியை மட்டும் ஏன் மகா சிவராத்திரி என குறிப்பிடுகிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிவ பெருமான் யார்?

சிவ பெருமானே, சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாக வழிபடப்படுகிறார். பிறப்பு- இறப்பு இல்லாதவர் என்பதால் பரமசிவன் என்றும், எந்த காலத்திலும் நிலையாக இருக்கக் கூடியவர் என்பதால் சதாசிவன் என்றும், தெய்வங்கள் அனைத்திற்கும் தலைவனாக விளங்குவதால் மகாதேவன் என்றும் சிவனை அழைக்கிறோம். தனது நடனத்தின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை செய்வதாகவும், இவரது கையில் உள்ள உடுக்கையில் இருந்து எழும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து விதமான தொழில்களை சிவ பெருமான் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

சிவம் என ஏன் அழைக்கிறோம்?

சிவபெருமானை எத்தனையோ திருநாமங்களைக் கொண்டு நாம் அழைத்தாலும் அதிகமாக அவரை குறிப்பிடும் ஒரே சொல் 'சிவம்'. இந்த சொல்லை, இறைவனின் பெயர் என நினைத்து தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதனால் எந்த மந்திரத்தை சொன்னால், எப்படி வழிபட்டால் சிவனின் அருளை பெற முடியும் என தேடிக் கொண்டிருக்கிறோம். சிவனுக்குரிய மந்திரங்களிலும் எது அதிக சக்தி வாய்ந்தது, விரைவில் பலன் தரக் கூடியது எது என தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சிவம் என்ற ஒற்றை சொல்லே மகா மந்திரம் என்பது பலருக்கும் தெரியாது. இந்த ஒற்றை சொல்லுக்குள் அனைத்தும் அடக்கம் என்பதும் தெரியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சிவம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சிவம் என்ற சொல்லுக்கு அர்த்தம்

'சிவம்' என்ற சொல்லுக்கு வடமொழியில் மங்களம், முழுமை பெற்ற என்று பொருள். 'சிவம்' என்பதில் 'சி' என்பது சிகாரம் (அறிவு), 'வ' என்பது வகாரம் (மனது), 'ம்' என்பது மகாரம் (மாயை) என்பதை குறிப்பதாகும். அறிவைக் கொண்டு மனதில் உள்ள மாயை விளக்கினால் நமக்குள் இருக்கும் சிவமாகிய ஆற்றல் வெளிப்படும் என்பதே இதற்கு பொருள். பக்தியின் அடிப்படை நோக்கம் என்பது இறைவனை அடைவது கிடையாது. நமக்குள் இருக்கும் இறை சக்தியை உணர்ந்து, நீயே சிவமாக மாறுவது தான். 'சி' என்ற எழுத்தை நன்கு உற்று கவனித்தால் சிவலிங்க வடிவத்தில் இருப்பது தெரியும். இந்த ஒரு எழுந்தே சிவ-சக்தியின் ஐக்கியமான வடிவமாகும். 'ச' என்பது சிவனையும், மேலே உள்ள அதோடு இணைந்த வடிவம் சக்தியாகவும் கருதப்படுகிறது. இதில் சக்தியாகிய அந்த வடிவத்தை நீக்கி விட்டு படித்தால், அந்த வார்த்தை 'சவம்' என்று ஆகிய விடும். சிவனை விட்டு, சக்தி நீங்கினால் உயிரற்ற உடலுக்கு சமம் என்பதை குறிப்பதாகும்.

சிவனின் அருளை பெற மகா சிவராத்தியன்று சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த சிவ மந்திரங்கள்
சிவ சிவ என சொல்வதன் பலன்.

சிவனை அழித்தலுக்கு உரிய கடவுள் என நினைத்து பண்டை காலத்தில் அவரை வழிபடாமல் தவிர்த்தவர்கள் அதிகம். சிவனை வழி வழியாக வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் மட்டுமே வழிபட்டு வந்தனர். ஆனால் சிவன் கருணையின் வடிவானவர். பக்தியுடன் எவர் அழைத்தாலும் ஓடி வந்து அவர்களுக்கு வேண்டியதை அருளக் கூடியவர். அவர் பாவங்களை, பிறவிப் பிணியை மட்டுமே அழிக்கக் கூடியவர். நிலையான இன்பமான மோட்சத்தை அருளக் கூடியவர் சிவன் என்பது அவரை வழிபடுபவர்களுக்கு மட்டுமே புரியும். சிவ சிவ என்ற சொல்லை சொன்னாலே பாவங்கள் நீங்கி விடும். சிவம் என்ற சொல்லுக்கு இன்பம் என்றும் பொருள். எங்கும் சிவம், எதிலும் சிவம் என்றால், எங்கும் இன்பம் எதிலும் இன்பம் என்பதே பொருளாகும்.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வருவதை மட்டுமே *மகா சிவராத்திரி* என்கிறோம். மாசி மாதத்தை மகா மாதம் என்றும், சூரிய கும்ப ராசியில் பயணிக்கும் மாதம் என்பதால் கும்ப மாதம் என்றும் பெயர். மாசி மாதத்தில் வரும் அனைத்தையம் மகா என்றே குறிப்பிடுவது உண்டு. சிவராத்திரியத மகா சிவராத்திரி என்றும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகம் நட்சத்திரத்தை மகாமகம் என்றும், இந்த மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மகாசங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கிறோம். கும்பம் என்றாலே முழுமையானது, மங்களத்தின் அடையாளம் என பொருள். அதனால் தான் கோவில் பூஜைகள் போன்றவற்றில் பூரண கலசம் வைத்து வழிபடுகிறோம். சிவ பெருமான் பூரணத்துவமானவர் என்பது, மாதங்களில் முழுமை பெற்ற மாதமாக கருதப்படும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை, மகா சிவராத்திரி என்றும் அழைக்கிறோம். மகா சிவராத்திரி என்றாலே இன்பத்தை, மங்களத்தை, நிறைவான வாழ்வை வழங்கும் ராத்திரி என்று பொருள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.