புதன் பகவான் ஸ்தலம் பூமிபாலகர் திருக்கோயில்!
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி..
மூலவர் – பூமிபாலகர்
உற்சவர் – காய்சினவேந்தன்
தாயார் – மலர் மகள் நாச்சியார், நில மகள்
நாச்சியார், புளியங்குடிவள்ளி
தீர்த்தம் – வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருப்புளிங்குடி
ஊர் – திருப்புளிங்குடி
மாவட்டம் – தூத்துக்குடி
மாநிலம் – தமிழ்நாடு
இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாமரைக்கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பாத தரிசனம் செய்ய வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இந்திரனுக்கு பிரம்மகத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம். வருணன், நிருதி, தர்மராஜன், நரர் ஆகியோருக்கு காட்சி கொடுத்ததலம்.
பாடியவர்கள்...
நம்மாழ்வார் மங்களாசாசனம்
கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர்செய் கடுவினை நஞ்சே என்னுடையமுதே கலிவயல் திருப்புளிங்குடியாய் வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே.
–நம்மாழ்வார்
திருவிழா: வைகுண்ட ஏகாதசி
சிறப்புகள்...
இத்திருக்கோயிலில் மூலவரான பூமிபாலகர் பெருமாள், வேதசார விமானத்தின் கீழ் கிழக்கு திசையை நோக்கி திருமுக மண்டலமாக (மரக்காலைத் தலையின் அடியில் வைத்து சயனத்தில் உள்ளார்) பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோயிலானது நவதிருப்பதிகளில் 4-வது திருப்பதி (திருப்புளியங்குடி) மற்றும் நவகிரகங்களில் இது புதன் தலமாகும்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இத்தலமானது 83வது திவ்ய தேசம் ஆகும்.
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயிலில் உள்ள லட்சுமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிக மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
வேறு கோயில்களில் காணவியலாத காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலில் இறைவனை பாத தரிசனம் செய்ய வேண்டுமானால், வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகதான் தரிசனம் செய்ய முடியும்.
இத்திருக்கோயிலின் பூமிபாலகர், காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) என்ற பெயரில் உற்சவராக உள்ளார்.
இத்தலமானது இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம் ஆகும்.
திருவிழாக்கள்...
வைகுண்ட ஏகாதசி இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
பிரார்த்தனைகள்...
கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
நேர்த்திக்கடன்கள்...
இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்தலாம்.
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
இருப்பிடம்...
நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வாடகைக் கார், அல்லது வேன் எடுத்துகொள்வது நலம்.
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : வரகுணமங்கையிலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து – 32 கி.மீ.,