66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பேரழிவு நடந்தது. சுமார் 10 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு விண்கல் பூமியை பலமாகத் தாக்கியது. இது நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. இந்தத் தாக்கத்தின் விளைவாக டைனோசர்கள் உட்பட பூமியில் வாழ்ந்த 75%-க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் தாவர இனங்கள் முற்றிலும் அழிந்து போயின. அப்படி அழியும்போது அந்த நாள் எப்படி இருந்திருக்கும் தெரியுமா?
விண்கல் தாக்குதல்: அப்போது இயற்கை எழில் கொஞ்சிய பூமியில் ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. இது அதிபயங்கர ஓசையுடன் பூமியை நோக்கி வேகமாக வந்து, மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தைத் தாக்கியது. இந்த தாக்கத்தின் விளைவாக பூமி மொத்தமாக அதிர்ந்து சுனாமிகள் உருவாகின, தீ மலமலவென பரவியது மற்றும் பெரிய அளவிலான தூசிகள் வளிமண்டலத்தை முற்றிலுமாக மூடியது.
தூசி மேகங்கள் ஒட்டுமொத்த வானத்தையும் மூடி சூரிய ஒளி பூமியினுள் வராமல் தடுத்தது. இதனால் பூமியே இருளில் மூழ்கியது. பூமியின் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து, பெரும்பாலான இடங்கள் உறையத் தொடங்கின. தாவரங்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைக்காததால் உணவுச் சங்கிலி முற்றிலுமாக சீர்குலைந்து பல உயிரினங்கள் பசியால் இறந்து போயின.
டைனோசர்களின் அழிவு: டைனோசர்கள் அந்த காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய விலங்கு இனமாகும். இந்த பிரம்மாண்ட விண்கல் தாக்கத்தை அவற்றால் தாங்க முடியவில்லை. பெரும்பாலான டைனோசர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் இறந்து போயின. இதில் சில டைனோசர் இனங்கள் தப்பிப் பிழைத்தாலும் காலப்போக்கில் பறவைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தூசி மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சூரிய ஒளி மீண்டும் பூமியை அடைந்தது. காலநிலை மெதுவாக சீராக்கி புதிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் தோன்றத் தொடங்கின. பூமி மீண்டும் பல உயிரினங்களால் நிரம்பியது. பாலூட்டி இனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இனங்களாக மாறின. அதில் மனிதனும் அடங்குவான்.
டைனோசர்களின் அழிவு என்பது பூமியின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய திசைத் திருப்பமாகும். இதன் காரணமாகவே புதிய உலகம் தோன்றியது. இன்று நாம் காணும் இந்த பூமி அப்போது நடந்த பயங்கரமான விளைவினாலேயே ஏற்பட்டது எனலாம் . மனிதர்கள் உருவாவதற்கும் அந்தப் பேரழிவே காரணமாக இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Paleozoic Era என அழைக்கப்படும் டைனோசர்களுக்கு முந்தைய காலம் பூமியின் வரலாற்றில் மிகவும் முக்கியமான காலமாகும். வலிமைமிக்க டைனோசர்களின் காலத்திற்கு முன் நமது கிரகம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதே உண்மையிலேயே சுவாரசியமான ஒன்றாகும். அதைத் தெரிந்துகொள்ள இந்தப் பதிவின் வாயிலாக சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நாம் காலப்பயணம் செய்யப்போகிறோம்.
டைனோசர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் பூமியின் நிலப்பரப்பு ஒன்றாக இணைந்த சூப்பர் கண்டங்களாக இருந்தது. இதில் மிகவும் பிரபலமானது 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த Pangaea என்கிற நிலப்பரப்பு. இப்போது இருப்பது போல கண்டங்கள் தனித்தனியாக பிரியவில்லை. பெரும்பாலான நிலப்பரப்பு ஆழமற்ற கடல்கள் மற்றும் சதுப்பு நிலங்களால் மூடப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் கடலில் வினோதமான கடல் வாழ் உயிரினங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
Trilobites, Ammonites மற்றும் Brachiopoda போன்ற பண்டையகால உயிரினங்கள் கடல்களை ஆண்டு வந்தன. இந்த கடல் உயிரினங்கள் கடல் சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன. மேலும் இன்று இருக்கும் பல உயிரினங்களின் மூதாதையர்களாக இந்த உயிரினங்கள் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.
Ferns, Horsetails மற்றும் Conifers போன்ற பழமையான தாவரங்களால் காடுகள் நிறைந்திருந்தன. இந்த தாவரங்களில் பூக்கள் மற்றும் பழங்கள் இல்லை என்றாலும் விலங்குகளுக்கு வாழ்விடங்களை வழங்கின. இத்தகைய தாவரங்களே பூமியில் நிலக்கரி உருவாக்கத்திற்கு வழிவகுத்தன.
மேலும், இந்த காலகட்டத்தை பூச்சிகளின் காலம் என்றும் கூறுவார்கள். இரண்டு அடிக்கு மேல் இறக்கைகள் கொண்ட பிரம்மாண்டமான தட்டான் பூச்சி, பெரிய தேள்கள், மரவட்டை போன்ற உயிரினங்கள் காட்டின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தன. இந்த பழங்கால பூச்சி இனங்கள் நாம் இன்று காணும் சிறிய வகை பூச்சிகளின் மூதாதையர்களாகும். அச்சமயத்தில் இருந்த அதிக அளவிலான ஆக்சிஜன் காரணமாக, பூச்சி இனங்கள் பிரம்மாண்டமாக உருமாற்றம் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
Paleozoic காலத்தில் டைனோசர் இனம் தோன்றவில்லை என்றாலும், டைனோசர்களின் ஆரம்பக்கட்ட ஊர்வன உயிரினங்கள் இருந்தன. Dimetrodon மற்றும் Eryops போன்ற ஊர்வன உயிரினங்கள் சதுப்பு நிலங்களில் பெருமளவில் வாழ்ந்தன. அவை அடுத்த சகாப்தத்தில் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் டைனோசர்களின் உருவாக்கத்திற்கு முன்னோடிகளாக இருந்தன.
பின்னர், குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மாற்றங்களால் இந்த காலகட்டம் பேரழிவை சந்தித்தது. Permian-Triassic எனப்படும் பேரழிவால் பூமியில் இருந்த கிட்டத்தட்ட 90 சதவீத உயிரினங்கள் அழிந்துபோனது. இந்த அழிவுதான் டைனோசர்களின் எழுச்சிக்கும், அவை வாழ்ந்த காலகட்டமான Mesozoic காலத்திற்கும் வழி வகுத்தது.
பூமியின் வரலாற்றை நாம் புரிந்துகொள்வது, மில்லியன் கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட மகத்தான மாற்றங்களை நாம் தெரிந்துகொள்ள உதவுகிறது. மற்றும் இன்று நாம் வாழும் உலகம் ஒரே நாளில் உருவானது அல்ல, பலபில்லியன் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி இதில் உள்ளது என்கிற பார்வையை நமக்கு வழங்குகிறது.
Carboniferous Period: ராட்சத பூச்சிகளின் காலத்தில் இந்த உலகம் எப்படி இருந்தது தெரியுமா?
கழுகின் அளவு இறக்கைகள் கொண்ட தட்டான் பூச்சிகள், ஒரு பெரிய காரின் அளவுடைய மரவட்டை மற்றும் தேள்கள் இந்த பூமியில் சுற்றித் திரிவது போன்ற ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய சாம்ராஜ்யம் உண்மையிலேயே மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு Carboniferous Period எனப்படும் காலத்தில் இருந்தது. இது டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு முந்தைய காலமாகும்.
Carboniferous Period: கார்போனிஃபெரஸ் காலம் தோராயமாக 300 முதல் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே ஏற்பட்டதாகும். அப்போது பூமியின் நிலப்பரப்புகள் ஒன்றாக இணைந்திருந்தன. இது Pangaea என்ற பெயர் கொண்ட சூப்பர் கண்டமாக இருந்தது. இவை பெரும்பாலும் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பரந்த சதுப்பு நிலக் காடுகளாகும்.
ராட்சத பூச்சிகள்: கார்போனிஃபெரஸ் காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அப்போதிருந்த பூச்சிகளின் அசாதாரண அளவுதான். அத்தகைய பிரம்மாண்ட பூச்சிகளின் பரிணாமம் குறித்து இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு பல கோட்பாடுகள் வெளிவந்துள்ளன. அது எப்படி அந்த காலகட்டத்தில் பூச்சிகள் ராட்சத அளவில் இருந்தன?
ஆக்சிஜன் அளவு: அந்த காலகட்டத்தில் பூமியின் வளிமண்டலத்தில் இன்றைய காலகட்டத்தை விட அதிக அளவு ஆக்சிஜன் இருந்தது. ஆக்சிஜன் நிறைந்த சூழல் பூச்சிகள் பெரிதாக வளர அனுமதித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில் ஆக்ஸிஜன் அவற்றின் வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளை மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறைந்த வேட்டையாடிகள்: பூச்சிகளின் பிரம்மாண்ட உருவத்திற்கு மற்றொரு காரணி என்னவென்றால், அந்த சமயத்தில் வேட்டையாடும் விலங்குகளின் பற்றாக்குறைதான். பூச்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விலங்குகள் நிலத்தில் இல்லாததால், பூச்சிகளின் பரிணாமம் மற்றும் அளவு பெரிதாவதற்கான சுதந்திரம் இருந்தது.
உலகை ஆண்ட ராட்சத பூச்சிகள்: கார்போனிஃபெரஸ் காலம் என்பது ஒரு சிறப்பான பல்லுயிர் பெருக்க காலமாகும். பிரம்மாண்ட பூச்சிகளைத் தவிர சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளில் ஏராளமான பிற உயிர்களும் செழித்து வளர்ந்தன. அந்த சகாப்தத்தில் குறிப்பிடத்தக்க ராட்சச பூச்சிகள் என்று பார்க்கும்போது,
Maganeura: சுமார் 75 சென்டிமீட்டர் வரை இறக்கைகள் கொண்ட ஒரு தட்டான் பூச்சியை கற்பனை செய்து பாருங்கள். அதன் பெயர்தான் Maganeura. இந்த டிராகன்ஃபிளைகள் அந்த காலகட்டத்தில் வானத்தை ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது.
Arthropleura: ஆர்த்ரோப்ளியூரா என்பது இரண்டு மீட்டர் நீளத்திற்கு மேல் வளரக்கூடிய ஒரு பெரிய மரவட்டைப் போன்ற உயிரினமாகும். அதன் பெரிய உருவம் மற்றும் ஏராளமான கால்களுடன் அந்த சமயத்தில் காடுகளில் சுற்றித்திறந்து தாவரங்களை உண்டு செழித்து வளர்ந்தன.
Pulmonoscorpius: இந்த ராட்சதத் தேள் 70 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியதாகும். இவற்றின் அச்சுறுத்தும் தோற்றம் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி சிறிய விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டிருக்கின்றன.
கார்போனிஃபெரஸ் காலமானது அசாதாரண உயிரினங்கள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகளால் நிரம்பிய ஒரு பண்டைய உலகத்தை பற்றிய ஒரு பார்வையை நமக்கு தெரியப்படுத்துகிறது. அப்போது செழித்து வளர்ந்த ராட்சத பூச்சிகள் அந்த காலத்தில் சுற்றுச்சூழல் நிலைமைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை நமக்கு விளங்க வைக்கின்றன. இவற்றையெல்லாம் இந்த காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இவற்றை கற்பனை செய்வதே இப்படி இருக்கிறதென்றால், உண்மையில் இவையெல்லாம் இந்த காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? என சிந்தித்துப் பாருங்கள்.