ஒரு கோடி சம்பளம், ஆனாலும் இந்தியரின் விசாவை நிராகரித்த அமெரிக்கா!

america-visa-problem
ஒரு கோடி சம்பளம், ஆனாலும் இந்தியரின் விசாவை நிராகரித்த அமெரிக்கா!

டெல்லி: ஆண்டுக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் இந்தியர் ஒருவர், வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரிடம் வெறும் 3 கேள்விகளை மட்டுமே கேட்ட தூதரக அதிகாரிகள் விசாவை நிராகரித்தனர். ஒரு நிமிடம் கூட நேர்காணல் நடக்காத நிலையில், அவரது விசா நிராகரிக்கப்பட்டதால் அவர் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் ஐடி ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வேலைக்காகச் சென்று கொண்டிருந்தனர். இருப்பினும், டிரம்ப் வந்த பிறகு நிலைமை மாறியுள்ளது. வெளிநாட்டினருக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் கெடுபிடி நிலவுகிறது. சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக எல்லாம் விசா நிராகரிக்கப்படுவதாகப் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. 

அப்படியொரு சம்பவம் தான் இப்போது டெல்லியில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்த இந்தியருக்கு நடந்துள்ளது. அந்த நபர் B1/B2 விசா கோரி விண்ணப்பித்திருந்தார். விசா நேர்காணலுக்காக அவர் டெல்லியில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்றுள்ளார். க்ளவுட் நேட்டிவ் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற அவர், தனக்கு எப்படியும் விசா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், அவரது விசா விண்ணப்பம் வெறும் 40 நொடிகளில் நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்..  

இது தொடர்பாக அந்த நபர் ரெட்டிட் பக்கத்தில், "எனது B1/B2 விசா நேர்காணல் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது. வெறும் 3 கேள்விகள் மட்டுமே கேட்டார். ஒரு நிமிடம் கூட அந்த நேர்காணல் நடக்கவில்லை. விசாவை நிராகரித்துவிட்டதாகச் சொல்லிவிட்டார். எனக்கு எங்குத் தவறு நடந்தது என்றே தெரியவில்லை. அடுத்த முறை என்ன தவறை திருத்திக் கொள்ளலாம் என்று கொஞ்சம் உதவுங்கள்" என்று சொல்லி நேர்காணலில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

நேர்காணலின்போது அமெரிக்காவுக்கு எதற்காகச் செல்கிறார்கள்.. இதற்கு முன்பு அமெரிக்கா அல்லது வேறு எதாவது நாட்டிற்கு சென்றுள்ளீர்களா.. அமெரிக்காவில் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் உள்ளனரா என்று மூன்று கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளனர். இவர் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் நடைபெறவிருக்கும் கியூப்கான் + க்ளவுட்நேட்டிவ் கான் மாநாட்டில் கலந்துகொள்ளவே தான் அமெரிக்கா செல்வதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும், "நான் ஒரு நிறுவனத்தில் மூத்த ஐடி தலைவராக வேலை செய்து வருகிறேன். க்ளவுட் நேட்டிவ் தொழில்நுட்பம் தொடர்பாகவே எனது தினசரி வேலை இருக்கும்.. எனவே, இந்தத் துறையில் ஏற்பட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது எனக்கு முக்கியம். எனவே, இந்த மாநாட்டில் கலந்துகொள்வது அவசியம். அதை அவரிடம் சொன்னேன்.

பிறகு, அந்த அதிகாரி என்னிடம் லிதுவேனியா, மாலத்தீவுகள் அல்லது இந்தோனேஷியாவுக்குப் பயணம் செய்துள்ளீர்களா என்ற கேட்டார். நான் ஆம் சென்றுள்ளேன் என பதிலளித்தேன். உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் யாராவது அமெரிக்காவில் இருக்கிறார்களா என கேட்டார்.. நானும் இல்லை எனப் பதிலளித்தேன்.. உடனே, அந்த அதிகாரி 214(b) நிராகரிப்புச் சீட்டை வழங்கினார்" என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் நிலையான வேலைவாய்ப்புடன் வலுவான குடும்ப பிணைப்பைத் தான் கொண்டிருப்பதாகவும் அவர் அந்த அதிகாரரிடம் சொல்லியுள்ளார். மேலும், வருடத்திற்குச் சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும், எட்டு மாதக் குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவிலேயே தங்கம் திட்டம் எதுவும் தனக்கு இல்லை என்றும் நிச்சயம் இந்தியா திரும்பிவிடுவேன் எனச் சொல்லியுள்ளார்.

மேலும், மாநாடு மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் அனைத்தும் கன்பார்ம் செய்யப்பட்டதை எடுத்துரைத்த அவர், இந்த மாநாடு ஒளிபரப்பப்படாது என்பதால் இந்தியாவில் இருந்தபடி அதில் கலந்து கொள்ள முடியாது என்றும் இதில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் சொல்லியுள்ளார். ஆனாலும், இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த அதிகாரி விசாவை நிராகரித்துவிட்டாராம். 

இதனால்தான் அந்த நபர் குழம்பிப் போய்விட்டார். தான் நேர்காணலில் நேர்மையாக இருந்தபோதிலும் விசா கிடைக்கவில்லை என்றும் வேறு என்ன செய்திருந்தால் விசா கிடைத்திருக்கும் என நெட்டிசன்களிடம் கேட்டுள்ளார். மேலும், மீண்டும் விசா கோரி விண்ணப்பிப்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை இணையத்தில் கேட்டுள்ளார்.

சம்பளம், குழந்தை என அவர் இந்தியா திரும்பிவிடுவார் என்பதற்கு வலுவான காரணங்கள் இருந்தபோதிலும் அமெரிக்க அதிகாரிகள் விசாவை நிராகரித்துள்ளனர். இதற்கான காரணம் தங்களுக்குப் புரியவே இல்லை என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.