கனிமொழி சொன்ன அதே டங் ஸ்லிப்.. இப்போது அருள் விக்னேஷும் "மன்மத நன்றி"!
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சுடச்சுட நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்கள்.. அதேசமயம், பேரவை நிகழ்வுகளுக்கு இடையே எதிர்பாராத சில சுவாரஸ்யமான தருணங்களும், ட்விஸ்ட்களும் அடிக்கடி அரங்கேறி, சோஷியல் மீடியாவில் கவனம் பெறுகின்றன.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய ஒரு வார்த்தைதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், தனது உரையை நிறைவு செய்யும் நேரத்தில் வழக்கம்போல பேரவைக்கு வணக்கம் தெரிவித்தார்.
"மனமார்ந்த நன்றி"
அப்போது, சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக "மனமார்ந்த நன்றி" என்று சொல்வதற்கு பதிலாக எதிர்பாராதவிதமாக "மன்மத நன்றி" என்று சொல்லிவிட்டார்.. தான் சொன்ன வார்த்தை தவறாகிவிட்டதை உணர்ந்த அருள் விக்னேஷ் உடனடியாக சிரித்தார்... அவருடைய அந்த சிரிப்பை தொடர்ந்து அவையிலும் சிரிப்பலை ஏற்பட்டது.
ஆனால், இந்த சம்பவத்தில் இன்னொரு விஷயம்தான் இப்போது இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. அருள் விக்னேஷ் "மன்மத நன்றி" என்று சொன்னபோது, அவருக்கு முன்பாக உட்கார்ந்திருந்த கனிமொழி சந்தோஷின் முகபாவனைதான் அது.. அவையில் அனைவருமே அந்த வார்த்தையை கேட்டு சிரித்தபோது கனிமொழி வித்தியாசமான ரியாக்ஷனை முகத்தில் காட்டினார்.
ஏன் கனிமொழிக்கு அப்படி ஒரு ரியாக்ஷன்?
சமீபத்தில் கனிமொழி சந்தோஷ் முதல்முறையாக சட்டப்பேரவையில் உரையாற்றியிருந்தார். தனது உரையை நிறைவு செய்த அவர், தனக்கு பேச வாய்ப்பு வழங்கிய சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும்போது, "மனமார்ந்த நன்றி" என்று சொல்வதற்கு பதிலாக எதிர்பாராதவிதமாக "மன்மத நன்றி" என்று கூறிவிட்டார்.
அந்த நேரத்தில் தான் செய்த வார்த்தைப் பிழையை உணர்ந்த கனிமொழியும் சிரித்து விட்டார்.. எனினும். அவருடைய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, "மன்மத நன்றி" என்ற வார்த்தையே இணையத்தில் கவனம் பெற்றது.
கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ்
இப்படியிருக்க, இன்று அருள் விக்னேஷும் அதே வார்த்தையை தவறுதலாக உச்சரித்திருக்கிறார். இதைக் கேட்டதும், அருகில் உட்கார்ந்திருந்த கனிமொழியின் முகத்தில் உடனடியாக அந்த ஃபிளாஷ்பேக் பளிச்சிட்டது போலவே அவரது ரியாக்ஷனும் அமைந்தது. அருள் விக்னேஷ் அந்த வார்த்தையைச் சொன்ன அடுத்த நொடியே கனிமொழி வெளிப்படுத்திய அந்த முகபாவனைதான் இப்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி உறுப்பினர் தெரியாமல் அந்த வார்த்தையை சொல்லிவிட்டாரா? அதெப்படி சரியாக அந்த குறிப்பிட்ட வார்த்தையே வெளிப்படும்? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஏற்கனவே தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் உரையை வாசிக்கும்போது ஏற்படும் வார்த்தை தடுமாற்றங்கள், ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள், போன்றவற்றின் மீதான விமர்சனங்கள் தினந்தோறும் வெளிப்பட்டபடியே உள்ளது.. இப்போது அந்த லிஸ்ட்டில் "மன்மத நன்றி"யும் இணைந்துவிட்டது.. அதைவிட கனிமொழியின் ரியாக்ஷன்தான் நெட்டிசன்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது...!!