எச். ராஜாவுக்கு விதித்த 6 மாத சிறை தண்டனை ரத்து - ஐகோர்ட் உத்தரவு

bjp-h-rajan-high-court-order
எச். ராஜாவுக்கு விதித்த 6 மாத சிறை தண்டனை ரத்து - ஐகோர்ட் உத்தரவு

பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருத்து தெரிவித்தது, திமுக எம்பி கனிமொழியை அவதூறாக பேசியதாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

பாஜகவின் தமிழக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ்வலைதளத்தில் "திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம்" என பதிவிட்டிருந்தார்.

அது போல் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக எக்ஸ் வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் எச்.ராஜா கருத்து பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக தந்தை பெரியார் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எச்.ராஜாவுக்கு எதிராக புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ஈரோடு போலீஸார் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் எச்.ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இன்றைய தினம் தனது தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது: எச்.ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என கூறி இரு வழக்குகளில் இருந்து தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தார்.