பிரபல நடிகர் தேவன் திடீர் முடிவால் கேரளாவில்...?
கேரள மாநில பாஜகவில் கடந்த சில மாதங்களாகவே உள்கட்சி விவகாரங்களும், தலைவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்து புகைய தொடங்கி இருந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான், மாநில பாஜகவின் துணைத் தலைவரும் சீனியர் மலையாள நடிகருமான தேவன், தனது பதவியையும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பையும் துறப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.. இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் உலுக்கி வருகிறது.. தேவனின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?
சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்த தேவன், 2004ம் ஆண்டு "நவ கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி" என்ற அமைப்பைத் தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார். அன்றைய காலகட்டத்தில் கேரளா தொடர்ந்து வளர்ச்சி அடையாமல் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதை சுட்டிக்காட்டி, அதை மாற்றுவதற்காகவே தான் புதிய கட்சியைத் தொடங்கியதாகவும் கூறியிருந்தார்.
பிறகு அதே ஆண்டில் நடைபெற்ற புகழ்பெற்ற வடக்காஞ்சேரி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார். பின்னர், 2021ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான முக்கிய சந்திப்பிற்குப் பிறகே, தனது அமைப்பைப் பாஜகவுடன் இணைத்து, மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.
இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆலப்புழாவில் உள்ள புகழ்பெற்ற கனிச்சுகுளங்கரை தேவி கோவில் வளாகத்தில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன (SNDP) யோகம் தொடர்பான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.. இதில் கலந்துகொண்டு நடிகர் தேவன் உரையாற்றினார்.. அப்போது தனது பேச்சை முடிக்கும்போது, திடீரென இந்த திடுக்கிடும் அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டார்.
"எனது அரசியல் பயணமும், இப்போது கேரளா பாஜகவின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுபட்ட பாதையில் பயணிக்கின்றன. சமுதாய மறுமலர்ச்சி தலைவரான ஸ்ரீ நாராயண குருவின் சமத்துவக் கோட்பாடுகளை முதன்மையாக கொண்டே என் அரசியல் செயல்பாடுகள் அமைந்தன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கேரளா பாஜகவின் செயல்பாடுகளில் அந்த சமூக நீதிக் கொள்கைகள் பிரதிபலிக்காமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தேன்.. தேர்தல் களத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட பாஜக தலைவர்களின் வெற்றிக்கும் நான் பணியாற்றினேன்.. கடந்த தேர்தலில் நான் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களும், தனது கருத்துகளுக்குக் கட்சிக்குள் உரிய அங்கீகாரம் கிடைக்காததால், இந்த முடிவு எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
என்னுடைய குறைகளை பற்றி சொல்வதற்காக, கட்சி தலைமையை அணுகியும் பலனில்லை.. அதனால்தான், 4 மாதங்களாகவே தீவிரமாக யோசித்து இந்த விலகல் முடிவை எடுத்துள்ளேன்.
பாஜகவில் எனக்கு செயல்பட எந்தவிதமான சுதந்திரமும் வாய்ப்பும் வழங்கப்படாமல் மாநிலத் தலைமை என்னை முற்றிலும் புறக்கணித்து முடக்கி வைத்திருந்தது.. கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் அரசியல் அறிவும் அனுபவமும் கொண்டவர். ஆனால் இப்போதுள்ள மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் ஒரு கார்ப்பரேட் அரசியல்வாதி.. அவரது அணுகுமுறை முழுவதும் கார்ப்பரேட் பாணியிலேயே உள்ளது.
பாஜகவின் தேசிய தலைமை மீது எனக்கு மதிப்பு உள்ளது.. ஆனால் கேரள மாநில பாஜகவின் முடிவெடுக்கும் முறையும், கொள்கை சார்ந்த செயல்பாடுகளும் ஏமாற்றத்தையே அளிக்கிற.. என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே முறைப்படி தயார் செய்துவிட்டேன்.. அதை விரைவில் மாநிலத் தலைமையிடம் ஒப்படைக்க போகிறேன்.
பாஜகவிலிருந்து வெளியேறிய பிறகு தான் முன்பு நடத்தி வந்த "கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி" அமைப்பை மீண்டும் புதுப்பித்துத் தனித்துப் பயணிக்க போகிறேன்" என்று ஓபனாகவே பேசியிருக்கிறார் தேவன்.
சமீபகாலமாகவே தேர்தல் நிதி முறைகேடு புகார்கள், உள்கட்சி மோதல்கள் மற்றும் முன்னாள் டிஜிபி ஜேக்கப் தாமஸ் தலைமையிலான விசாரணைகள் என்று ஏகப்பட்ட சிக்கல்களை எதிர்நோக்கி வருகிறது கேரளா பாஜக.
இப்படிப்பட்ட சூழலில் மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த ஒரு மூத்த தலைவரின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டுகளுடனான விலகல் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேவனின் இந்த திடீர் நகர்வு கேரள அரசியலில் ஒரு புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளது...!