மகளிருக்கு மாதம் 2500.... 6 இலவச சிலிண்டர்கள் எப்போது? - அமைச்சர் மரிய வில்சன் விளக்கம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 , 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் உளிட்ட அறிவிப்புகள் இடம்பெறாதது மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த திட்டங்கள் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தமிழக நிதியமைச்சர் இதற்கு பதில் அளித்துள்ளார்.
தவெக அரசு கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. மகளிருக்கு மாதம் ரூ.2,500, 5 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதும் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 4 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட கவர்ச்சிகர அறிவிப்புகளை தவெக தனது தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து இருந்தது.
எனவே, தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இந்த அறிவிப்புகள் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மக்கள் எதிர்பார்த்த முக்கிய இலவச திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தவெக அரசின் பட்ஜெட்டிற்கு பூஜ்ஜியம் மட்டுமே கொடுக்க முடியும் என்று எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பட்ஜெட் உரையில் மரிய வில்சன் கூறியிருந்தது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் கடன் அளவானது கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இருமடங்காக உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருப்பதனை தவெக அரசு ஆட்சி அமைத்த உடன் வெளியிட்ட நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையின் தெளிவுபடுத்தியுள்ளோம். மேலும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாயின் விகிதம் வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை என பல்வேறு நிதிநிலை குறியீடுகளில் தமிழ்நாடு மற்ற இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.
மொத்த வரி வருவயில் வட்டி செலுத்துவதற்கான தொகையும் பொறுப்பேற்றுக்கோண்ட செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு கிடைக்கும் நிதி ஆதாரம் என்பது குறைவாகவே உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தவெக அரசு, மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500, 6 இலவச சிலிண்டர்கள் போன்ற மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும். மாநிலத்தின் நிதி நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். குறுகிய கால அரசியல் ஆதாயங்களில் கவனம் செலுத்தப்போவது இல்லை.
அதேவேளையில், மாநிலத்தினை இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. முதலாவது பொது டெண்டர்களில் காண்டிராக்டர்களிடம் இருந்து கேட்கப்படும் தேவையற்ற சான்றிதழ்களின் கட்டாய சமர்ப்பிப்பு, அந்த டெண்டர்களை போட்டியில்லாதவாறு மாற்றியுள்ளன. இதனை களைந்து தவெக அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளது.
இரண்டாவதாக பல அரசுத்துறைகளில் அந்த துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட காண்டிராக்டர்கள் மட்டுமே டெண்டர்களில் பங்கேற்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி எந்த ஒரு துறையிலும் பதிவு செய்துள்ள காண்டிராக்டரும் தகுதியிருப்பின் மற்ற துறைகளின் டெண்டர்களிலும் பங்கேற்க முடியும் என்ற நிலையை அரசு கொண்டு வந்துள்ளது.
மூன்றாவதாக இளைஞர்களும் சிறு தொழில் செய்பவர்களும் அரசின் டெண்டர்களிலும் முதன் முறையாக பங்கேற்க ஏதுவாக குறைந்த மதிப்புள்ள டெண்டர்களில் உள்ள பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நடைமுறை டெண்டர்களில் ஆரோக்கியமான போட்டியினை ஏற்படுத்தி அரசின் வீண் செலவுகள் குறையும். இந்த முன் முயற்சிகளின் பலன்கள் அனைத்தும் அரசிற்கு கிடைக்க பெறவும் தொடங்கிவிட்டன" என்று தெரிவித்தார்.