இனி சென்னை கூவம், அடையாறில் படகு சவாரி! அமைச்சர் மரிய வில்சன்

tamilnadu-budget-chennai-koovam-river-boat-minister-mariya-wilson
இனி சென்னை கூவம், அடையாறில் படகு சவாரி! அமைச்சர் மரிய வில்சன்

கூவம் ஆற்றை சீரமைக்க சர்வதேச அளவில் டெண்டர் கோரப்படும். நதிகளை மேம்படுத்த தென்கொரியாவின் செங்ஜியான் நதி மேம்பாட்டு அடிப்படையில் திட்டம் உருவாக்கப்படும். கூவம், அடையாறில் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்தார்.

சென்னையில் உள்ள கூவம், அடையாறு ஆறுகளை சுத்தப்படுத்தும் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் இதற்கு பெரிய அளவில் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், பட்ஜெட்டில், கூவம், அடையாறு நதிகளை மேம்படுத்துவது தொடர்பாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடபாக மரிய வில்சன் கூறியதாவது:-

நகர்புற வெள்ள பாதுகாப்பு பாதிப்பை தடுப்பதற்கு முக்கிய நீர் வழித்தடங்கள் கொள்ளளவு அதிகரிக்கும் பொருட்டு, வெள்ள தடுப்பு சுவர்களின் உயரம் அதிகரிக்கப்பட்டு சங்கிலி இணைப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் நிலையான சமூக பயன்பாடு இடங்கள் உருவாக்கப்படும். சென்னையில் உள்ள அனைத்து முக்கிய குடிநீர் ஆதாரங்களையும் குடிநீர் விநியோக அமைப்புடன் இணைந்து ரிங் மெயின் பைப்லைன் சிஸ்டம் பணிகள் திட்டம் 3,108 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

2031 ஆம் ஆண்டுக்குள் முடிவு பெறும் வகையில் நடைபெறும் இந்த திட்டப்பணிகள் முடிவு பெற்ற பிறகு சென்னை நகரம் முழுவதும் சமமான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும். மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் வீதிகள் மேம்படுத்தப்படும். சரியான சாலை இணைப்பு நடைபாதைகள், மிதிவண்டிகளுக்கான தனி பாதைகள், கிராஸ் ஸ்ட்ரீட் இணைப்புகள், மேம்பட்ட சாலைகள் சந்திப்புகள், நவீன எல்.இ.டி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

சென்னை நகரில் 20 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் அமைக்கப்படும். சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைகளை ஒரு காலத்தில் பூர்த்தி செய்த அடையாறு மற்றும் கூவம் நதிகள் கழிவு நீர் நதியாகவே மாறியுள்ளது வேதனை அளிக்கும் ஒன்றாகும். தமிழகத்தில் இதற்கு முன் மாறி மாறி ஆண்ட அரசுகள் கூவம் மற்றும் அடையாறு நதியை சுத்தப்படுத்துவதிலும் அழகுப்படுத்துவதற்கும் பல நூறு கோடிகளை வாரி இறைத்தும் ஆறுகளின் தன்மையில் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ, இன்சா, மெசபோட்டோமியா ஆகிய நகரங்கள் நதிகளின் அருகிலேயே வளர்ந்தன. கூவம் ஆற்றை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வர முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கடுமையாக பாடுபடும். கூவம், அடையாறு நதிகளை மேம்படுத்த தென்கொரியவின் செங்ஜியான் நதி மேம்பாட்டு அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும். கூவம் மற்றும் அடையாறு நதிகளை சென்னையின் அடையாளமாக மாற்றுவதற்கு குளோபல் டெண்டர் கேக்கப்படும்.

விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். கூவம், அடையாறில் படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். நதிக்கரையில் அனைத்து வயதினரும் உடற்பயிற்சி செய்து தூய்மையான காற்றை சுவாசிப்பதை நமது அரசு உறுதி செய்யும். இந்த திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார்.