ஷூ அணிந்தபடி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு.. சர்ச்சையில் அமைச்சர் ரமேஷ்?

minister-ramesh-sri-rangam-temple-inspection
ஷூ அணிந்தபடி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு.. சர்ச்சையில் அமைச்சர் ரமேஷ்?

பழனி கோவில் நில மோசடி விவகாரத்தை தொடர்ந்து தற்போது அமைச்சர் ரமேஷ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஷூ அணிந்துகொண்டு ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பக்தர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்து அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்து சமய நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காலில் ஷு அணிந்து பார்வையிட்டதை கண்டிக்கிறோம் என்றும், பழனி கோயில் நில முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அமைச்சர் ரமேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பல்வேறு கோவில்களிலும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவில் நிர்வாகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால் சூட்டோடு சூடாக நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.. இதனால், பல்வேறு தரப்பிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதே நேரத்தில், பழனி கோவில் நில மோசடி விவகாரம் என அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தவெக அமைச்சரவையில் இளம் அமைச்சர்களில் ஒருவராக பதவியேற்றுள்ள அமைச்சர் ரமேஷ் மீது தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

அதவாது, திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கடந்த சனிக்கிழமை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர பகுதியில், அமைச்சர் ரமேஷ் காலில் ஷூ அணிந்தபடி சென்று ஆய்வு செய்தார். கோவில் வளாகத்திற்குள் ஷூ அணிந்தபடி அமைச்சர் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இது குறித்து பக்தர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பக்தர்கள் கூறும் போது, "பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீரங்கம் போற்றப்படுகிறது. புண்ணிய ஸ்தலமான ஸ்ரீரங்கம் கோவிலில் ஷூ' அணிந்தபடி அமைச்சர் ரமேஷ், கோபுர பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்து இருப்பது அதிர்ச்சியை தருகிறது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ரமேஷ் தனது விளக்கத்தை தர வேண்டும" என்று கூறியுள்ளனர்.

அமைச்சர் ரமேஷின் செயலுக்கு இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், "அமைச்சார் ரமேஷ் மன்னிப்பு கேக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராம ரவிக்குமார் கூறுகையில், "இந்து சமய நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காலில் ஷு அணிந்து பார்வையிட்டதை கண்டிக்கிறோம்.

அமைச்சரின் செயல் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தனது செயலுக்காக அமைச்சர் ரமேஷ் பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். இனாம் நிலங்கள் தொடர்பன வழக்கு நிலுவையில் இருக்கும் போது நிலங்கள் கோவில்களின் பெயரில் இல்லை என்று அமைச்சரின் கருத்து ஏற்க முடியாத ஒன்றாகும். இதற்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.