இரவு நேர
விருந்துக்கு
யார் யாரோ வந்து
போயிருந்தார்கள்...
பசியை
போக்கிக் கொண்டவர்கள் தான்
அதிகம்...
பரிமாறிய பாத்திரத்தின் பசி
பார்த்ததாரும் இல்லை...
இலை காய்ந்த உடன்
வயிறும் காய்ந்து போகும்..
வாழ்க்கையில்
வறுமை என்பது
எச்சில் சுரக்கும் வரை தான்...
எல்லாம் பார்த்தாகி விட்டது
உடலில் காதலை தேடியவர்கள் தான்
யாரென்று தெரியவில்லை...
என் காதுகளில்
ஏதேதோ பெயர்களைச் சொல்லி
உளறியபடி தான்
படுத்தார்கள்...
மனைவிக்கு பயந்தவர்கள்..
எனக்கும் அதே பெயர் தான் வைத்தார்கள்..
நடிகைகளின்
பெயர்களை சொல்லிக்கொண்டே
நாவில் எதையோ தேடியவர்கள்
அதிகம்...
நான் மட்டும் தான்... இரவில்
கண் விழிக்க
வாங்கப் பட்டேன்..
பகலில் எல்லாம்
சாலையின் ஓரத்தில்
வெளிச்சம் தெரிவதில்லை...
இரவில் மட்டும் தான்
மரங்களுக்கும்
டார்ச் லைட் அடிக்க கைகள் முளைக்கிறது...
எவ்வளவு தருவாய்
என்பதில் தொடங்கி
இவ்வளவு தானா
என்பதில் முடிகிறது...
சாலையோர
இரவு விருந்து...
வாழ்க்கை இப்படியும்
இருக்கிறது...
விடியும் வரை...
பாதை முழுவதும்
படுக்கை விரித்திருக்கிறது..
வேணாம் என்னை
விட்டுவிடுங்கள் என
கதறும் போதெல்லாம்...
பிச்சைக்காரன் என்ற
பழிச் சொல்லோடு
ஆண்மை கேவலப் படுத்தப்படுவதும்
வாடிக்கையாகிவிட்டது...
குருடாகவே இருந்திருக்கலாம்
இந்த காதலுக்கு
கண்கள் வந்த பின்
காணும் சாலைகள் யாவும்
காமப்பிசாசுகளின் கூடாரம்...
.... இயலிசம்..