கடந்த இரு மாதங்களாக மிகுந்த அலுவல்வேலைகள் காரணமாக புத்தக வாசிப்பை மேற்கொள்ள முடியவில்லை. ஆகஸ்ட்இல் ஆரமித்த இந்த நாவலை நேற்று தான் முடிக்க முடிந்தது.
அஜ்வா என்பது அரபு தேசத்தில் விளையும் ஒருவகை பேரிச்சைப் பழவகை. மிகக்கடிமான சூழ்நிலையிலும் வளரும் தன்மை கொண்டது. ஆனால் அது வளர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். விவசாயிகளின் பொறுமையை சோதிக்கும். அஜ்வா போலத்தான் இந்த கதையின் நாயகனும்.
இது ஒரு விதமான இறுக்கமான நாவல். தமிழகத்தின் போதை கலாச்சாரத்தைப்பற்றி பேசுகிறது. தமிழ்நாட்டின் இன்னோரு இருள்முகத்தை நமக்கு காட்டுகிறது. இந்நாவலை ஒரு நாளில் 15 பக்கங்களுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. ஒருவிதமான இறுக்கமான மனநிலையை இந்நாவல் உருவாக்கிவிடுகிறது. எத்தனை எத்தனை இளைஞர்கள் தங்களது வாழ்வை போதைப்பழக்கத்தால் தொலைத்துள்ளார்கள் என்பதை படித்து பார்க்கும் போது, மனம் வலிக்கிறது. இருள்படர்ந்த சுரங்கபாதையினுள்ளே கடைசி ஓரத்தில் தெரியும் வெளிச்சம் போல நாவலின் இறுதியில் வெளிச்சம் தெரிகிறது.
போதை உலகு எப்படிப்பட்டது? அங்கே இருப்பவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அவர்களால் அவர்களின் குடும்பங்கள் அடையும் சோதனைகளும் வேதனைகளும் என்ன? போதையினால் இறந்தவர்களும் அதிலிருந்து மீண்டவர்களும் உண்டு. அந்த மீளும் கொக்கியை கதாநாயகன் ஒரு மரணத்திற்கு பிறகு எவ்வாறு அடைகிறான் என்பதே இக்கதை.