கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன? - காஞ்சி மகா பெரியவா
இதோ பாலாஜி நம் கண் எதிரிலேயே இருக்கிறாரே. பெருமாள் தரிசனத்தைத் தவறவிட்ட ஒரு சந்நியாசி பெரியவாளைப் பற்றி சொன்னது மேலே.
காசி யாத்திரை தருணத்தில், செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் இருந்தபோது, ஒரு மாதத்துக்குக் கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் மகா பெரியவா. அவரால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அவரை யாரும் தொட்டுத் தூக்கி சேவை செய்ய முடியாது.
அந்த நாளில், மராட்டிய மாநிலத்தில் அரசுப் பணியில் இருந்தவர் அவர். திடீரென்று வேலையை உதறிவிட்டு சந்நியாசியானவர். ராமேஸ்வர யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் அவரது தண்டம் எப்படியோ தொலைந்துவிட்டது. அப்படி நேர்ந்துவிட்டால் வேறொரு சந்நியாசியிடமிருந்துதான் ஒரு தண்டத்தைப் பெறவேண்டும் என்பது நியதி. எனவே பெரியவா இருந்த இடம் தேடி வந்தார். பெரியவா ஒரு தண்டம் வழங்க, அதைப் பெற்றுக்கொண்டவர், மகானுக்குச் சீடனாகி விட்டதாகக் கருதி, அவரிடம் சரணடைந்து அங்கேயே தங்கி விட்டார்.
வயதில் மூத்தவராக இருந்த காரணத்தால், ஒரு மாதம் பெரியவா அவர்களுக்கு மிக அருகில் இருந்து சேவை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தினமும் பெரியவா பாதக் கமலங்களில் மலரிட்டு அர்ச்சனை செய்து வந்தார். யாத்திரையிலும் அவர் கலந்துகொண்டார்.
திருப்பதி வந்தது. வழக்கம்போல் விடுவிடுவென்று நடந்து வந்தார் மகா பெரியவா. பின்னால் தொடர்ந்த அந்தச் சந்நியாசி வந்து சேருவதற்குள் கோயிலின் உள்ளே சென்று பெருமாளை தரிசித்துவிட்டு வெளியே வந்துவிட்டார் பெரியவா.
அப்போதுதான் மெதுவாகப் படிகளேறிக் கொண்டிருந்தார் துறவி. ‘அடடா... இவரை விட்டுவிட்டு தரிசனம் முடித்து விட்டோமே’ என்று வருந்தினார் பெரியவா. ஆலய நிர்வாகிகளை அழைத்து, “இவர் என்னுடன் வந்திருப்பவர். இவரை உள்ளே அழைத்துச் சென்று பெருமாளை தரிசனம் செய்து வையுங்கள்...” என்றார். நிர்வாகிகள் அவரை அழைக்க, “ரொம்ப நன்றி. எனக்கு தரிசனம் ஆகிவிட்டது. புறப்படலாம்...” என்றார் சந்நியாசி.
“என்னது! தரிசனம் ஆகிவிட்டதா? எப்போது?”
“கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன? இதோ, பாலாஜி நம் கண் எதிரிலேயே இருக்கிறாரே...” என்று சொன்ன சந்நியாசி, கோயில் வாசலிலேயே மகா சுவாமிகளின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆலய மணி ஒலித்தது!
நன்றி - சக்தி விகடன்