மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது. இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் ஊர்த்துவமுக நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.
அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள். இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் சுவர் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும். பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், அதோமுக நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது. அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் த்ரியக்முக நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள். இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம். நீங்களே குறிப்பிட்டதுபோல இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.