இறந்த பிறகு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியப் போவதில்லை .இருந்தாலும் நாம் கண்ணால் காண்கின்ற சூரியன், சந்திரன் உண்மை என்பது போல் ,மூலநூல்களில் ஆதாரமாக சில உண்மைகளும் சொல்லப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்த கட்டுரை
ஜோதிட சாஸ்திரத்தில் இறப்பிற்கு பின், சொர்க்கம் செல்லும் ஜாதகருக்கு சில அமைப்புகள் உள்ளதை மூலநூல்களில் அறிய முடிகிறது.
பொதுவாக 12ஆம் இடத்தில் கேது இருந்து, 12-ம் அதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று, 12-ம் இடத்திற்கு குரு பார்வை கிடைத்தால் ,அவர்கள் மோட்சம் எனக்கூடிய இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிலையைப் பெறுவர் என்கிறது ஜோதிடம்.
பிறப்பற்று இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிலை என்பது வேறு. நல்ல காரியத்தின் அடிப்படையில் சொர்க்கத்தில் சிலகாலம் வாழ்ந்து விட்டு , மறுபடியும் மனிதப் பிறவி ஏற்பது என்பது வேறு.
நித்திய உறக்கம் ,பூரண உறக்கம் என்று இரண்டு வகை உள்ளது.
நித்திய உறக்கம் என்பது நாம் தினசரி இரவில் தூங்கி, காலையில் கண்விழித்து எழுவது என்பதாகும்.
பூரண உறக்கம் என்பது ,உறங்கி மறுபடியும் எழாமல் இருப்பது. அதாவது உடலில் உயிர் அற்ற நிலை. இறப்பு என்பது அதுவே மோட்ச பேறு.
பொதுவாக 12ம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால், அவர்கள் நிம்மதியாக தூங்கி எழ முடியாது.
அதிலும் குறிப்பாக சனி, ராகு,செவ்வாய் போன்ற அமைப்புடன் இருந்தால், இவர்கள் எளிதில் ஆழ்ந்த நித்திரையோடு தூங்கஇயலாது.
ஆனால் விதிவிலக்காக பாவகிரகமான கேது பன்னிரண்டாம் இடத்தில் இருப்பவர்களுக்கு நன்றாக ஆழ்ந்த தூக்கம் உண்டு. அதிலும் சுபர் வீடுகளில், சுபர் பார்வை உடன் இருந்தால் , ஆன்மீக கனவுகளுடன் கூடிய தூக்கம் உண்டாகும்.
இந்த விதி்தான் மூல நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் வாழக்கூடிய காலகட்டங்களில், நாம் செய்யும் நல்ல செயல்களைப் பொறுத்தே சொர்க்கத்திற்குச் செல்லும் அமைப்பு உண்டாகும்.
மூலநூல்களில் குறிப்பிட்ட கருத்து என்னவென்றால் பன்னிரண்டாம் வீடு சுப கிரக வீடாக அமைந்து ,12ஆம் வீட்டில் குரு எந்த விதத்திலும் கெடாமல் இருந்து, அந்த வீட்டுக்குடைய கிரகம் அதை பார்வை செய்தால், அவர்களுக்கு இறப்பிற்குப் பின் சொர்க்கம் செல்லும் நிலை உண்டாகும் என்கிறது.(இது பொது விதி மட்டுமே)
உதாரணமாக விருச்சிக லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். விருச்சிக லக்னத்திற்கு 12ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன் மேசத்தில் இருந்து தன் வீட்டை பார்வை செய்து ,12ல் குரு இருந்தால் இறப்பிற்குப் பின் சொர்க்கம் என பொதுவாக விதி சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக கூறப்பட்ட விதி யாதெனில்
பன்னிரண்டாம் வீட்டில் குரு இருந்து ,அந்த வீட்டின் அதிபதி அதனை பார்வை செய்தாலும் அல்லது மற்றொரு சுபகிரகம் பார்வை செய்தாலும், அவர்களுக்கு இறப்பிற்குப் பின் சொர்க்கம் செல்வர் எனக் குறிப்பிடப்படுகிறது
.(இது நடைமுறையில் சாத்தியமில்லை .விதி மட்டுமே ஆராயப்பட்டுள்ளது .ஆனால் இவர்கள் தான தர்மங்களை செய்தால் ,அவர்கள் எளிதில் சொர்க்கம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்)
ஜோதிடத்தை தவிர்த்து
சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிகள் யாதெனில்
1. ஸ்ரீராம ஜெயத்தை ஒரு கோடி முறை ஒருவர் எழுதினாலும் ,சொன்னாலும் நிச்சயம் சொர்க்கம் உண்டு.
2. 108 பிரதோஷங்களில் தவறாது கலந்து கொண்டவர்களுக்கும் சொர்க்கம் உண்டு.
3.48 வைகுண்ட ஏகாதசி நாளில் விஷ்ணு பாதம் பணிந்து ,விரதமிருந்து, மார்கழி மாதத்தில் இறந்தால் நிச்சயம் சொர்க்கம் உண்டு. (நம்மூரில் வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தால் சொர்க்கம் செல்வார் என்ற பொதுவான பேச்சும் உண்டு இது உண்மை இல்லை .அவர் கர்மபலனை ஏற்பவே சொர்க்கம் நரகம் அமையும்.) இந்த அமைப்பு சிவராத்திரிக்கும் பொருந்தும்.
4. அனாதை பிணத்தை அடக்கம் செய்பவர்களுக்கும் ,அவர்களுக்கு முறையான ஈமக்கிரியைகள் செய்து, தகனம் செய்பவர்களுக்கும் இறந்தபின் சொர்க்கம் உண்டு.
5. தினசரி பிரம்மமுகூர்த்த காலகட்டங்களில் , வாழ்க்கை முழுவதும் வழிபடுவருக்கும் சொர்க்கம் உண்டு.
6. எந்தவித ஆதரவற்றவர்களுக்கும், ஆதரவற்ற கன்னிப் பெண்களுக்கும் வாழ்க்கை அளித்து, அவர்கள் வாழக் கூடிய அளவிற்கு வசதி செய்து கொடுத்து, பிரதிபலன் பாராமல் அவர்களுக்கு உதவுபவருக்கும் சொர்க்கம் உண்டு.
வாழும் காலத்தில் பிறருக்கு எந்தவித தீமையும் செய்யாமல் ,மன சுத்தத்துடன் , இருப்பதைக் கொண்டு பெருமையுடன் வாழ்க்கை நடத்துபவருக்கும் சொர்க்கம் சாத்தியமே
ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு ,ஒரு பங்கை உண்டியலில் போடுவதால் எவ்வித பலனும் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஓம் நமசிவாய
ஜோதிடர் மாரிமுத்து. 9788968519