தேவையானவை:
கருப்பு உளுந்து (உடைத்தது) - 1/2 கப்
கருப்பட்டி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
காய்ச்சிய பால் - 1 கப்
செய்முறை
1. கருப்பு உளுந்தை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கழுவி கொள்ளவும்.
2. ஒரு சிறிய குக்கரில் கழுவிய பருப்பு மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் 10 முதல் 15 விசில் வரும் வரை வேகவைக்கவும். பருப்பு பூவாக வேகவில்லை என்றால் மீண்டும் 5 விசில் வேகவைக்கவும்.
3. கருப்பட்டியை நன்கு பொடித்து ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கரைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
4. குக்கரை திறந்து பருப்பை லேசாக மசித்துக் கொள்ளவும். பின் அதில் தேங்காய் துருவல் மற்றும் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டியை சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கவும்.
5. கஞ்சி சிறிது ஆறியதும் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
இந்த கஞ்சியில் பால் சேர்பதற்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்து அருந்தலாம். அதேப்போல கருப்பட்டிக்கு பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
கருப்பு உளுந்தை உங்கள் உணவில் சேர்ப்பதால் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.ஏனென்றால் நார்ச்சத்து அதிகமான, புரதம் நிறைந்த மற்றும் இரும்புச்சத்து நிரம்பியுள்ள தானியமாகும்.
இந்த கஞ்சியில் கருப்பு உளுந்தோடு கருப்பட்டி சேர்த்துள்ளதால் விரைவில் ஜுரணிக்க உதவுகிறது. இந்த கஞ்சி உங்களை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும்.