இந்த கொண்டைக்கடலை தோசை செய்வதற்கு 250 கிராம் கொண்டைக்கடலையை நன்கு கழுவி முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும். அரை கப் பச்சரிசி மற்றும் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயம் இரண்டையும் நன்கு தண்ணீரில் கழுவி இவற்றையும் ஊற வைக்க வேண்டும். இவை அனைத்தும் குறைந்தது 8 மணி நேரம் வரை ஊற வேண்டும்.
எட்டு மணி நேரம் கழித்து ஊறிய கொண்டைக்கடலை மற்றும் பச்சரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் பாதி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை அரைத்த பிறகு இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் மீதி இருக்கும் கொண்டைக்கடலை மற்றும் அரிசியை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதையும் ஏற்கனவே அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இந்த மாவை குறைந்தது 8 மணி நேரம் வரை மூடி போட்டு அப்படியே வைத்து விட வேண்டும் மாவு நன்கு புளித்து பொங்கி வர வேண்டும். எட்டு மணி நேரம் கழித்து மாவு நன்கு புளித்து நுரைத்து பொங்கி இருக்கும். இப்பொழுது ஒரு ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது கொண்டைக்கடலை தோசைக்கான மாவு தயார் தோசை கல்லை காய வைத்து சிறிதளவு நெய் ஊற்றி இந்த தோசையை சுட்டு எடுக்கவும். சத்தான சுவையான கொண்டைக்கடலை தோசை தயார் இதனை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.