Breaking News :

Thursday, April 25
.

நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்


ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு அற்புதங்களை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

விஜயநகர பேரரசின் கீழ், திம்மிரெட்டி, பொம்மி ரெட்டி ஆகியோர் வேலூர் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். குறுநில மன்னர்களான இவர்களது வழித்தோன்றல்தான் சதாசிவராய மன்னர். இவர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லைப் பகுதியில் பல நல்ல காரியங்களைச் செய்து வந்தார்.

 
ஒரு சமயம் அந்தப் பகுதியில் தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் அனைவரும் அவதிப்பட்டனர். இரக்க குணமும், இறை பற்றும் மிக்க சதாசிவராயர், இதனைக் கண்டு வேதனை அடைந்தார். நோயை விரட்டும் வழி குறித்து, அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அரண்மனை ராஜ வைத்தியரான கன்னிகா பரமேஸ்வரரிடம், மக்களின் நோயைப் போக்க ஏதாவது செய்யும்படி பணித்தார்.

மன்னனின் ஆணைப்படி ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர், தன்வந்திரி முறையில் ஒரு லிங்கத்தை தயார் செய்ய முடிவு செய்தார். சந்திர பாஷாணம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்பட 5 வகை பாஷாணங்களை பக்குவப்படுத்தி, தெய்வாம்சமும், மருத்துவ குணமும் இரண்டற கலந்திருக்கும் வகையில் சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார். இந்த லிங்கத்தின் உயரம் வெறும் 7 அங்குலம் மட்டுமே.

கி.பி.1379–ம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், திமிரி நகரின் கோட்டையில் இந்த பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12–வது சங்கராச்சாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஆசீர்வாதத்துடன் இந்த பிரதிஷ்டை விழா நடந்தது. 

ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது. திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், புகையும் தன்மை கொண்டது. எனவே லிங்கத்தை குளிர்விக்கும் வகையில் அதன் மீது எப்போதும் நீர் விழுமாறு செய்யப்பட்டது. அந்த அபிஷேக தீர்த்த நீரே, நோய் தீர்க்கும் பிரசாதமாக மாறியது.

அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் ‘திமிரி’ என பெயர் மாற்றம் கொண்டது. மக்கள் நோய் குணமாவதைக் கண்ட மன்னன் சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். பக்தி பரவசத்தில் மிதந்தார்.

ஆனால் சோதனைகள் மனிதர்களுக்கு மட்டுமே வருவதல்லவே.. சில சமயங்களில் கடவுள்களுக்கும் கூட சோதனை ஏற்படுவதுண்டு. அந்தச் சோதனை படையெடுப்பின் வாயிலாக வந்தது. ஆற்காடு நவாப் படை எடுப்பின் போது வேலூர் கோட்டை பிடிபட்டது. திமிரி கோட்டை அவர்கள் கட்டுக்குள் வந்ததால், கோட்டை இடிக்கப்பட்டது. திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு, வேதியியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் வைத்தனர். அதன்பிறகு அந்த லிங்கத்தை, திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் அருகில் இருந்த குளத்தில் புதையச் செய்தனர்.

500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்றின் தொடர்ச்சி, கடந்த 1985–ம் ஆண்டு மீண்டும் தொடங்கியது. அப்போது திமிரியில் ஐயப்பன் கோவில் கட்டும் பணி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அந்தப் பணி தடைபட்டது. ‘கோவில் நிர்மாணிக்கும் பணியில் ஏதேனும் தெய்வ குற்றம் நிகழ்ந்து விட்டதோ?’ என சந்தேகம் கொண்ட, திமிரி ஐயப்பன் நற்பணி மன்ற நிர்வாகி ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு நாடி ஜோதிடரை அணு கினார்.

அப்போது, திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதைந்து போன பாஷாண லிங்கம் பற்றிய செய்தி தெரியவந்தது. மேலும், அந்த பாஷாணலிங்கம், ராதாகிருஷ்ணன் முயற்சியால் குளத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெருமுயற்சி மேற்கொண்டு, கோவில் குளத்தில் புதைத்ததாக கூறப்பட்ட பாஷாண லிங்கத்தை தேடினார். இறுதியில் 1985–ம் ஆண்டு ஜூன் மாதம் 14–ந் தேதி வெள்ளிக் கிழமை குளத்தில் இருந்து பாஷாணலிங்கம் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதியிலேயே திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இந்தலிங்கம் தற்போது நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி தருகிறது. இந்த நீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாஷாணலிங்கம் இருந்த இந்த நீரை அருந்துபவர்களுக்கு நோய்கள் தீருவதாக நம்பப்படுகிறது.

திமிரி பாஷாணலிங்கேஸ்வரர் கோவில் வெளிப்புற வளாகத்தில் அரசமர விநாயகர், சப்த கன்னியர், சுயம்பு சதுரகிரி சிவன், அகத்தியர், தட்சிணாமூர்த்தி உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவில் உள்புற வளாகத்தில் சந்திரகலா சோமநாயகி அம்மனுக்கு தனிசன்னிதி உள்ளது. இந்த சன்னிதியானது லிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் பாஷாணலிங்கம் கிடைத்த சோமநாத ஈஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் பெரிய அளவில் யோக நிலையில் இருக்கும் சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பாஷாண லிங்கம் கிடைத்த பெரிய குளத்தில், லிங்கம் கிடைத்த பகுதியை மட்டும் சிறிய குளம்போல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சிறிய குளத்தில் இருந்து எடுக்கப்படும் நீரையே கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.