Breaking News :

Saturday, April 20
.

ருத்ராட்ஷத்தின் மகிமை


ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை.

ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத்தரும்.

ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.

ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?

சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது. ருத்ராட்ஷம், அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். 

அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?

ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.

 நீர்பருகும்போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும்
எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவ பெருமானே
கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். 

இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாஷ்சமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.

எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது.

பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால்விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். 

ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச்சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். 

ஐந்து முகருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முகருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.,

பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள்ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழைகழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம்) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக்கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையை ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. 

எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம்
அணிய வேண்டும். 

மேலும், சிவமஹா புராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும்என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

பெண்கள், தங்களுடைய தாலிக்கொடியில், அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச்
சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். 

அதை எல்லாநாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?

இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.

ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காக சிவபெருமானால் அருளப்பட்டது.

ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?

இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள்வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.

ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப்போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ருத்ராட்ஷம் அணிந்தால் மறுபிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள்தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக்கூடாது.

இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும்
பாக்கியம் கிடைக்கும்.

ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.

ருத்ராட்ஷத்தினை  அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன்
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. 

அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணிய வேண்டும்.

ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது.

நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக் கொண்டிறிக்கின்றீர்களோ, அதே போல் வாழ்ந்தால் போதும். இதில் எவ்விதமாற்றத்தையும் செய்யத்தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லற தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும்
செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்கள் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம்?
ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டால், இதன் பலன்கள் தான் என்ன?

நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில்குளித்த புண்ணியம் கிடைக்கும்
என்கின்றன  புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.

மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும்,
சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும்
என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.

இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன்தாள் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.

அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல்,
ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒருசேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர்.

இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின்
தாக்கங்கள் குறையும்.

ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர்பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து
நற்கதிஎற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம்
அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக
ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு
ருத்ராட்ஷம் அணியும் மஹாபாக்கியம் கிடைக்கும்,.

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மதசின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும் இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும்
பொருட்படுத்தக்கூடாது.

அப்படிப்பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்? அவர்களா நம்மைக்
காப்பாற்றுகிறார்கள்? 

ஆனால் மதச்சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக்காலத்திலும் சொல்லிக்
கொண்டிருப்பவர்களை சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப்பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்தசூழ்நிலையிலும் ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.

யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின்
அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும்இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இப்பேற்பட்ட மஹிமை பொருந்திய ருத்திராக்ஷத்தை நாம் எப்போதும் அணிந்து
நற்பயன் அடைவோம்.

"ஓம் நமச்சிவாய". "திருச்சிற்றம்பலம்"


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.