Breaking News :

Tuesday, April 16
.

ஒரே நாளில் நவக்கிரக தோஷம் நீங்க மயிலாப்பூர் கோயிலுக்கு வாங்க!


மயிலாப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்.

கபாலீஸ்வரர் கோயிலின் அருகே ஆறு பழமையான, அறியப்படாத சிவாலயங்கள் அமைந்துள்ளது. மொத்தம் இந்த ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும். 

இந்த 7 சிவாலயங்களுக்கு நவக்கிரகங்களோடு தொடர்புள்ளது. இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப்போல் அமைந்துள்ளது. 

அதுமட்டுமின்றி சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் இந்த 7 ஆலயங்களாகும். இவைகள்  அனைத்தும் மயிலாப்பூர் சுற்று வட்டாரத்தில்  இருப்பதால் ஒரே நாளில் தரிசனம் செய்ய இயலும்.

அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்தால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் நமக்கு கிடைக்கும்.
 
ஏழு ஆலயங்களுமே 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என வரலாறு கூறுகின்றது. ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இக்கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றும் வழிபடும் மரபு உள்ளது. 

முதற்கோயில் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்  (சூரியன் ஸ்தலம்)

மயிலை கடைவீதியில் இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில்  உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். 

விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இவ்விடம் விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகும். பைரவர் சன்னிதியும் சூரியனார் சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. 

சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு சுவாமி தரிசனம் செய்து  இறைவன் திருவுளப்படி நடராஜத் தாண்டவம் ஆடி அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக திகழ்கின்றது.  

இரண்டாவது கோயில் ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் (சந்திரன் ஸ்தலம்)*

மயிலையில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறும். இதனால் ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. 

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் இந்த ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில். பண்டைக் காலங்களில் 64 வகையான தீர்த்தக்குளங்கள்  இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தீர்த்த குளங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகும். 

மாசி மாதத்தில் ஏழு  சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காணும் முன்பாகவே இந்தக் கோயிலில் இருக்கும் தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின்  இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி வரத் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது என்பது ஐதீகம்.

மூன்றாவது கோயில் ஸ்ரீ வாலீஸ்வரர் (செவ்வாய் ஸ்தலம்):

'மயிலாப்பூரின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். 

இங்கு மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் அருள்மிகு வாலீஸ்வரர். 
இக்கோயில் 2000 வருடங்களுக்கும் முன்பானது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்குரியது. 

ராமாயணக் காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இத்தலத்தின் இறைவனை வழிபட்டுத்தான் பல்வேறு  வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். 

நிலத்திலிருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இக்கோயிலின் பிரத்தியேகமாகும். ஸ்ரீ ராமரும் இந்த தலத்தின் இறைவனை வழிபட்டதாக கூறப்படுகிறது.

நான்காவது கோயில்ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்:

காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் (மயிலாப்பூர் கடைவீதி) அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். 

மல்லிகை செடிகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு  கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்துள்ளது.

அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலமாகும். மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள். இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகும். இக்கோயில் இறைவனை புதன் கிழமைகளில் வழிபட்டால்  புத கிரக தோஷங்கள் விலகும். 

ஐந்தாவது கோயில் ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்):

இக்கோயில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரை  சாலையில் இருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் இணையும் இடத்தில் உள்ளது. இக்கோயில் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயிலும்  அமைந்துள்ளது. 

12-ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயில் பிற்கால சோழர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டதாக கூறப்படுறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்பதால் இக்கோயிலின் இறைவனுக்கு  ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற பெயர் உண்டு. 

இக்கோயிலின் ஈசன் நவக்கிரகங்களான தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின் அம்சமாகத் விளங்குகிறார். வியாழக்கிழமைகளில் இவர்களை வணங்கி வரத் திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். 

ஆறாவது கோயில் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்):

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் இந்த வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக உள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம். மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு 3 அடி  நிலம் தானம் கேட்டார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்துவிட்டார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழியில்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக்கொண்டார்.

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை இழந்து போகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாகத் வரலாறு. ஆகவே ஸ்ரீ வெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும். இங்குள்ள  சுக்கிர ஸ்தலத்து ஈசனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்கும்.

ஏழாவது கோயில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்):

மயிலாப்பூர் சப்த சிவதலங்களில் அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டார். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

இங்கு சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி உள்ளார். ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளிள்ள இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்த கோயிலுக்கு மயிலாப்பூர் எனப்பட்டது.  

நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர் அமர்ந்திருக்கிறார்.  
எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இந்த தலத்து ஈசன் கபாலம் மற்றும் எலும்பிற்கு அதிபதியாக உள்ளார். அஸ்தியிலிருந்து பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். 

ஒவ்வொரு வருடமும் பங்குனி பெருவிழாவில் 8ம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத் திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில். 

இந்த தலத்தை சனி கிழமைகளில் வணங்கி வந்தால்  ஆயுள்  தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் விலகும். 

மேலும் திருக்கடையூர் மற்றும் திருபைஞ்ஞீலி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலமாகவும் இது விளங்குகிறது.
 
எட்டாவது கோயில் அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்)

திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள்.
 கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணமுடியும்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு  புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது.

மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

ஒன்பதாவது கோயில் அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்):

துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் சொல்லப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். 

காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் உள்ளது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம்.  புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.

பத்தாவது கோயில் அருள்மிகு அப்பர் சுவாமி:

மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணி தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளார்கள். ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது. ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம்.

சைவ அடியார்களுள் ஒருவரான  ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில்  பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான  திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பின்னர் அதனை திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். 
ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள்  பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், *"மயிலையே கயிலை கயிலையே மயிலை"* என்ற சிறப்பைப் பெற்றது.  

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.