Breaking News :

Thursday, April 25
.

தருமபுரம் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்க முடியாது


தமிழக சட்டமன்றத்தில் தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது பேசிய அவர், 'ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வு பட்டினப்பிரவேசம். அனைவரின் அன்பைப் பெற்ற ஆதீனத்தின் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்திருப்பது சரியானது அல்ல. பாரம்பரிய நிகழ்வுக்குத் தடை விதித்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். தடையை உடனடியாக நீக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி சட்மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அப்பர் ஆகியோரின் கதைகளை எடுத்து முன் வைத்து பேசினார்.'இனி பல்லக்கு ஏற மாட்டேன் என சொன்னவர் தான், நம்முடைய திருஞானசம்பந்தர். இதை நாம் சரி என்று சொல்வது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்வு என்பது சுமார் 400 ஆண்டுகளாக இருப்பது.அதற்குத்தடை விதித்திருப்பது சரியானது. 18 ஆதீனங்களையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூச்சலிட்ட நிலையில், குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன் அனைத்து கட்சியினருக்கும் அவரவர் கருத்தைக் கூறும் உரிமை உண்டு என்றார்.

பிறகு பேசிய செல்வப்பெருந்தகை, 'நாங்கள் அக்னி, வருணன், சந்திரன், சூரிய தெய்வங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இவைகள் எல்லாம் இடையில் புகுத்தப்பட்டவை. நான் தமிழர் பண்பாடுகள் குறித்து பேசுகிறேன். மனிதனை மனிதன் தூக்குவதைத் தடுக்க வேண்டும்' என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் பேசிய பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி, 'தருமபுர ஆதீனம் போன்று தமிழ்நாடு முழுவதிலும் பல ஆதீனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்பவர்களும் ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருக்கக்கூடிய நிலையில் ஆதீனங்கள் வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து தந்துள்ளன. மேலும், தமிழ் இலக்கியம் போன்றவற்றை வளர்க்கவும் ஆதீனங்கள் பல்வேறு வகையில் உதவி புரிந்துள்ளன.மேலும், பல நூற்றாண்டுகளாக தொன்றுத்தொட்டு நடைபெறக் கூடியப் பட்டினப்பிரவேசத்திற்கு வருவாய்த்துறை தடை விதித்தது ஏற்புடையதல்ல. இது அவர்களின் எல்லைக்குள் அவர்களின் வேலையாட்கள் மூலம் பல்லக்கைத் தூக்குகிறார்கள். ஆகவே, இதற்குத் தடை விதித்தால் தேவையற்ற மதப் பிரச்னை ஏற்படும். அரசு நடவடிக்கை எடுத்து தொடர்ந்து, பட்டினப் பிரவேசம் நடைபெற வழிவகை செய்ய வேண்டும்' எனக் கூறினார்.

மேலும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், 'தருமபுர பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்க முடியாது. மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்குவதை ஏற்க முடியாது. தடை விதிக்கக்கோரியும் எழுந்த மனுவை ஏற்று தருமபுர பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரப்பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்க முடியாது. ஆகவே, தடையை நீக்கவேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

தெய்வீகப்பேரவையை உருவாக்கியவர் கருணாநிதி : இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ’கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது ஆதீனங்களுக்கு முதன்முதலில் "தெய்வீகப்பேரவை" என்று உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ்நாட்டில் மொத்தம் 45 ஆதீனங்கள் உள்ளன. அதில் சைவம், வைணவம், சக்தி பீட வழிபாடு நடைமுறையில் உள்ளது. சைவத்தையும், வைணவத்தையும் இணைத்து, இந்துசமய உயர்நிலைக் குழு என்ற ஒன்றை அமைத்தது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு.

யாரோ ஒருவர் சென்றதால்தான் தடையா? அந்த யாரோ ஒருவர் சென்ற பிறகுதான் தருமபுர ஆதீனம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர், இது 'ஆன்மிக அரசு' என்று பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசினார்.ஆதீனங்களுக்கு மதிப்பளித்தது திமுக அரசு: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டம் கூட ஆதீனங்கள் கையால் தான் ஆணைகள் அளிக்கப்பட்டன. பன்னெடுங்காலமாக வழங்கப்படாமல் இருந்த பணிநியமன ஆணைகளைக் கூட ஆதீனங்களை வைத்தே பணிநியமான ஆணைகளை முதலமைச்சர் வழங்க வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் ஆதீனங்களை அழைத்து ஆலோசனை பெற்றது உண்டா? இன்று காலை ஆதீனத்துடன் 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினேன்.

இதனை அரசியலாக்கவேண்டாம்: அப்போது அவர் நாங்கள் தமிழ் சார்ந்தவர்கள். தமிழுக்கு உரிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. ஒரு சிலர் தாங்கள் செய்த தவறுகளை மறைக்க இதை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். நீதிமன்றதுக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நடுநிலையோடு துலாக்கோல் போல் இந்த அரசு முடிவு எடுக்கும்; இதை அரசியலாக்க வேண்டாம். முதலமைச்சர் இதில் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். ஆதீனத்துடன் பேசி இரு சுமுகமான முடிவை அரசு எடுக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.