Breaking News :

Friday, April 19
.

கஷ்டங்கள் தீர்க்கும் கால பைரவாஷ்டமி!


கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமி என்றே போற்றப்படுகிறது. அகந்தையை அழிந்து உலகில் நன்மையை நிலைநாட்டும் சக்தியாகக் காலபைரவர் இன்றும் அருள்கிறார் என்பது ஐதிகம். பொதுவாக பைரவ வழிபாடு என்பது பயமகற்றும் வழிபாடு.

பகைவர்கள் பற்றிய பயம், வாழ்க்கை பற்றிய பயம், நோய் பற்றிய பயம், வறுமை பற்றிய பயம் என எந்த வித பயம் என்றாலும் நாம் வணங்க வேண்டியது கால பைரவரையே. சிவாலயத்தின் காவலரான கால பைரவரே சிவனடியார்களின் காவலரும் ஆவார்.

காலபைரவாஷ்டமி நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதிகம். இந்த நாளில் சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. 

ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. ராகு - கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு  சாந்த வடிவமானவர்.

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதிகம். 

காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லாரும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

தேங்காய் விளக்கேற்றினால் சிறக்கும் வாழ்வு

விளக்கேற்றி இறைவனை வழிபடுவது நம் மரபு. அதிலும் தேங்காய் விளக்கேற்றி வழிபடுவது பைரவருக்கு உகந்த வழிபாடு. மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. இவ்வாறு விளக்கேற்றி வழிபட பைரவரின் பேரருள் கிடைக்கும்.

கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் விசேஷம்.

பைரவருக்கு உகந்த நைவேத்தியங்கள்

வீட்டில் பைரவரை வழிபடுபவர்கள் எளிய நைவேத்தியங்களைச் செய்து வழிபடலாம். சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பால் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், மிளகு மற்றும் சீரகம் கலந்த சாதம் ஆகியவை பைரவருக்கு உகந்த நைவேத்தியங்கள். 

மேலும் சூயம், அப்பம், வெள்ளப்பம், தேன் அடை, எள்ளுருண்டை, பாயசம், தேன்குழல், அதிரசம் ஆகியவையும் பைரவ மூர்த்திக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள் ஆகும்.

இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்து வழிபட்டாலே போதுமானது.

பைரவ மூர்த்தியை வழிபட உகந்த தியான ஸ்லோகம்

ரக்தஜ்வால ஜடாதரம் சசிதரம்

ரக்தாங்க தேஜோமயம் |

டக்கா சூல கபால பாசகதரம்

ரக்ஷாகராம் பைரவம் ||

நிர்வாணம் ஸுநவாஹனம்

த்ரிநயனஜ் சாநந்த கோலாஹலம்

வந்தே பூதபிசாச நாதவடுகம்

க்ஷேத்ரஸ்ய பாலம் சுபம் ||

இதன் கருத்து 

சிவந்த ஜுவாலைகளைக் கொண்ட சடையை தரித்திருப்பவரும், சந்திரனை முடியில் தரித்திருப்பவரும், சிவந்த மேனியராகத் திகழ்பவரும், ஒளிமயமாக விளங்குபவரும், உடுக்கை சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருப்பவ ரும், உலகத்தை காப்பவரும், பாவிகளுக்கு பயங்கரமான தோற்றத்தைக் காட்டுபவரும், நிர்வாணமாக இருப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், மூன்று கண்களைக் கொண்டவரும், எப்போதும் ஆனந்தத்தினால் மிகுந்த கோலாகலம் கொண்டவரும், பூத கணங்கள் பிசாசுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்குத் தலைவனாக இருப்பவரும், க்ஷேத்திர பாலகருமான பைரவ மூர்த்தியை வணங்குகின்றேன்.

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையும் மாலையும் சொல்லிவரலாம். 

அதேபோல

ஓம் கால காலாய வித்மஹே

கால தீத்தாய தீமஹீ

தந்நோ கால பைரவ பிரசோதயாத்:" 

என்னும் பைரவ காயத்ரி மந்திரத்தையும் சொல்லி வழிபடலாம்.

பைரவர் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே செல்லும் போது வழியில் பயமில்லை என்பது ஆன்றோர் வாக்கு.

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். 

இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது. அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது. 

தாருகாரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும் படி அவனிடம் கூறினார். 

அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்து விட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. 

தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர்.  பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. 

காளம் (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, காளி என பெயர் சூட்டினாள். காளிதேவி கடும் கோபத்துட ன் தாருகாரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது.  

பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். 

அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, பைரவர் என்று பெயர் வைத்தார்.

காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, காளபைரவர் எனப்பட்டு தற்போது, காலபைரவர் ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர். 

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தை யில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். 

இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக , நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, வேதஞாளி  என்ற பெயர் இருக்கிறது. 

பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். 

தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயு மேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., சென்றால், தகட்டூரைஅடையலாம். 

கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவவாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர். அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்போதே பதிவுசெய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய அனுமதி வழங்கப்படும். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக் கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார். 

இந்த ஆண்டு காலபைரவாஷ்டமி!  (27-Nov-2021 ) அன்று கொண்டாடப்படுகிறது. எனவே  அன்று  பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். குறைந்தபட்சம் சிவப்பு நிற மலர்களையேனு ம் பைரவருக்கு சாத்தி சகல நன்மைகளை யும்  பெறலாம்.கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான பைரவரை வணங்குங்கள். அவை காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.