Breaking News :

Friday, April 19
.

உண்மையே பேசு - சிறுகதை


ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்.

அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே..! வணக்கம் பல..! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்.."

“மகனே! நீ யார்..?' 

அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன். பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்..”

"அடக் கடவுளே..! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா..?"

"இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் திருடுவது தான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்கிறேன்.."

"சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்கள் இருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, முதலாவது மந்திரத்தை உனக்குப் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.."

"சரிங்க சாமி..! அப்படியே செய்வேன்.."

"முதல் மந்திரம் 'சத்தியம் வத' – அதாவது உண்மையே பேசு”

"சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய் உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே..!!"

சாமியார் புன்னகை பூத்தார்.. அவனும் விடை பெற்றுச் சென்றான்.

மனைவியிடம் போய் நடந்ததைச் சொல்ல, அவளுக்கு ஒரே சிரிப்பு. 

"இது என்னங்க..? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’'

"அது என்னடி கதை..?"

"ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்..”

“கண்மணி..! கவலைப்படாதே, குருவருள் எனக்கு கிட்டும்..”

இரவு நெருங்கியதும் கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவு பார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக் கொண்டு போனான். இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கை வைத்து பெரிய சாதனை புரியவேண்டும் என்று எண்ணி, அரண்மனையில் திருடப் போனான். 

கும்மிருட்டில், அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு

ராஜா: நில், யார் அங்கே..?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்..

ராஜா: அட, நானும் பாக்தாத் திருடன் தான். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா..? பங்கில் பாதி கொடுத்தால் போதும்.

திருடன்: மிக நல்லது. வா போவோம்..

ராஜாவுக்கு அவரது அரண்மனை வழி எல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று, எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக்காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட, உனக்கென்ன பைத்தியமா..? நாமோ திருடர்கள். இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா..?

திருடன்: நண்பா..! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டும் அல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன், ஒரு கல்லாவது திருடு போகாமல் இருந்ததே என்று சந்தோஷப்படுவானில்லையா..?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு..! நமது அரண்மனை கஜானாவில் திருட்டு நடந்திருப்பதாக நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா..! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இது பற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பேன்.

அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே, அதை இடுப்பு வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.

அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள்.. ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.

ராஜா: அப்படியா..? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா..?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா..? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெல்லாம் சுருட்டுவது தானே அவர்கள் தொழில்.

ராஜா: போகட்டும், எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது.

"யார் அங்கே..?"

காவலர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, "இதோ, இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.."

விரைந்து சென்ற காவலர், அந்த திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது..? சொல்.

திருடன்: நானும், இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன்.

இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக்கல்.. (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)

"நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்..."

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா..! என்ன அபவாதம் இது..? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே..! அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்..

ராஜா: நிதியமைச்சரே..! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர்: (நடுங்கிக் கொண்டே) மன்னவா..! என்னை மன்னித்துவிடுங்கள். பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல்" வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பதவிக்குத் தகுதியுடையவர்.

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க..! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க..!!

புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாள், சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளை ஒப்புவித்தான்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.