Breaking News :

Saturday, April 20
.

ஸ்ரீ குருராகவேந்திரர் ஜீவசமாதி நாள்


1992 - 93  மந்த்ராலயத்தில் நடந்த நிஜம்.

தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர்.

பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். நன்றாக அவள் படித்தாலும் மேற்கொண்டு அவள் தந்தையால் படிக்க வைக்க முடியவில்லை.

படிப்புக்கு ஏற்றபடி வரன் பார்க்க வேண்டுமே என்பதை காட்டிலும் வறுமையே முதல் காரணமாய் அங்கு நர்த்தனம் ஆடியது.

பெண் பருவ வயது வந்ததும் தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர்.நாட்கள் கடந்தது.
நல்ல வரன். குருவின் அருளால் இனிதாய் அமைந்தது.

பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாமென்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர்.

எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த சமயத்தில் அவர்களின் அடுத்த வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர்.

திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர்.

இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ  தன்னுடைய வறுமையிலும் பெண்ணை சிறப்பாக கரையேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் புரட்டலானார். 

தெரிந்தவரிடத்திலும் கடன் வாங்கினார்.
அப்படியும் ₹ 60000 கு பணம் அதிகமாக தேவைப்பட்டது.

குரு ராஜா இந்த பணத்தை யாரிடம் கேட்பேன்,
எந்நிலை அறிந்து இதை யார் தருவார்கள் என தினந்தோறும் கவலை பட்டனர். 

குடும்பத்தினர். சரி நாம் போய் நேரிடையாக மந்த்ராலயத்திற்கு சென்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடம் சென்று முறையிடுவோம். 
மடாதிபதியிடம் ஆசி வாங்கி மங்கள அட்சதை வாங்கி வருவோம் என மூவரும் கிளம்பினர்...

அதிகாலையிலேயே துங்கபத்ராவில் குளித்தனர். மூலராமர் பூஜையை கண்டு களித்தனர். பிருந்தாவனத்திலேயே மனமுருகி வேண்டினர்.

மாலை... மறுபடியும் துங்கையில் குளியல்.
அன்றைய இரவு தேரோட்டம் எல்லாம் கண்டு களித்தனர்.

ஆலய இடதுபுறம் உள்ள ஒரு சிறிய அறையில் அன்றைய மடாதிபதி பிரசாதம் வழங்குவார்.
இது அனைவருக்கும் கிடைக்காது.

டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே அந்த அறையில் அனுமதிப்பார்கள்.அன்றைய தினம் மடத்தின் தலைமை குருவாக இருந்தவர் சுஷ்மீந்திர தீர்த்தர்.

இவர்களும் ஒரு தட்டில் பழம் திருமண பத்திரிக்கை வைத்திருந்தனர். எப்படியாவது இதை குருவிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணம்.

இவர்களுக்கு முன் வரிசையில் நின்றவர்கள் எல்லாம் நிறைய பழங்கள், சால்வைகள் என அவர்கள் கையில்  வைத்திருந்த தட்டுகளே அவர்களை அடையாளம் காட்டியது.

ஒவ்வொருவராய் குருவிடம் காணிக்கைகளை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினர்.இவர்களது முறை வந்ததும் இவர்களும் பத்திரிக்கை தாங்கிய தட்டை கொடுத்து திருமணத்திற்கு பணம் தடையாக இருக்கிறது சுவாமி. நீங்கள் தான் என் பெண்ணை ஆசிர்வதிக்க வேண்டும் கண்ணீர் மல்க உருகினர் தாய், தந்தையர். மகளின் கண்ணீரும் கரைந்தது.

உடனே தலைமை குரு எல்லாம் அவர் பார்த்து கொள்வார் என கூறி மந்திராட்சதையை கொடுத்து ஆசிர்வதித்து இவர்களுக்கு முன்னால் ஒரு தம்பதியர் கொடுத்த தட்டை இவர்களிடத்திலே கொடுத்து இது தான் அவருடைய ஆசி என கூறி ஆசிர்வதித்தார்..

இவர்களும் பயபக்தியுடன் வாங்கி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தனர். ஆனால் தட்டை கொடுத்த தம்பதிக்கோ அவமானமாகி விட்டதே...

நாம் குருவுக்கு கொடுத்ததை அவர் யாருக்கோ அப்படியே கொடுத்து விட்டாரே? என்ன இருக்கிறது அந்த தட்டில் என பார்க்க கூட இல்லையே என சங்கடத்தில் நெளிந்தனர்.

உடனே குருவின் பக்கத்தில் இருந்த சீடரிடம் விஷயத்தை கூறினர். அவரும் அப்படியா என ஆச்சரியப்பட்டு தலைமை பீடாதிபதியிடம்  "குருவே இவர்கள் மகான் பெயரில் அந்த தட்டில் ரூ 60000 க்கான செக் வைத்துள்ளனர். அதை கவனிக்காமல் அதை அப்படியே அவர்களுக்கு கொடுத்து விட்டீர்கள்" என்று கூற, குருவும்  " அவர்கள் இருக்கிறார்களா என பார்த்து இருந்தால் அவர்களை அழைத்து வா " என கட்டளை இட்டார்.

சீடரும் உடனே நாலைந்து சீடர்களை அழைத்து கொண்டு பிருந்தாவனம் முழுவதும் தேடி கண்டுபிடித்து அவர்களை  குருவிடம் அழைத்து வந்தனர்.

அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு மறுபடியும் நம்மை அழைத்திருக்கிறார் என்று.
உடனே சீடர் அவர்களிடம் குரு உங்களுக்கு கொடுத்த பிரசாத தட்டை கொடுங்கள் என கேட்டு வாங்கி குருவின் முன்னால் வைத்தார்.

அவர்கள் அதை கொடுத்தவுடன் அவர்களை வெளியில் நிற்க வைத்து முகவரியை வாங்கி கொண்டு சிறிது நேரம் காத்திருங்கள் என கூறி வெளியில் நிற்க வைத்தனர்.

உடனே குரு முன்பு அந்த தட்டை அளித்த தம்பதியை வரவழைத்து அதில் இருந்த அந்த வெள்ளை கவரை எடுக்க செய்து செக்கின் பின்னால் குருவின் கையெழுத்தும், அன்பளிப்பாக அளித்தவரின் கையெழுத்தும் அதில் இடம்பெற செய்து அந்த பணம் முழுவதும் அந்த வறுமையான குடும்பத்திற்கே வழங்கிட வழி செய்தார்.

பிறகு அந்த குடும்பத்தை உள்ளே அழைத்து விவரமாக நடந்ததை கூறினர். ஐயா நீங்கள் உங்கள் மகளுக்கு திருமண செலவுக்கு பணம் தேவை என்று ஸ்ரீ ராகவேந்திரரிடம் கோரிக்கை வைத்தீர்கள்.

அந்த கோரிக்கை தான் இப்போது அவரின் கையாலே நடத்தி வைக்கப்பட்டது. மகானின் பெயரால் இருந்த செக்கை உங்கள் பெயரில் மாற்ற முடியாது என்பதால்  பணம் கொடுத்த அந்த தம்பதியர் அனுமதியுடன் தலைமை குருவின் கையெழுத்து அடங்கிய செக்கை மறுபடியும் அந்த குடும்பத்திற்கு வழங்கி இதுதான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் பரிபூரன ஆசிகள் என கூறி மீண்டும் அந்த செக்கை மந்திராட்சதை கொடுத்து குரு வழங்கினார்.

அந்த குடும்பத்தினர் ஓம் ஸ்ரீ ராகவேந்திராயா என கதறியது மந்த்ராலயம் முழுக்க ஒலித்தது.

இது கற்பனை அல்ல...
1992 - 93 வருடத்தில் நடந்ததாக " மந்திராலய மகானின் பெருமைகளை ஆராய்ச்சி செய்து ஒன்பது பதிப்புகளை வெளியிட்டு விரைவில் தமது பத்தாவது பதிப்பை வெளியிட ஏற்பாடுகளை செய்து வரும் திருமிகு அம்மன் சத்தியநாதன் அவர்களின் இரண்டாம் பாகத்தில் இது இடம்பெற்றுள்ளது. குரு ஸ்ரீ ராகவேந்திர மகான் இன்னும் என்னென்ன அற்புதங்கள் செய்ய போகிறாறோ?..

ஓம் குரு ராகவேந்திராய நமஹ...


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.