நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் புற நோயாளிகள் பிரிவு புனரமைக்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழாவில் தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
கொரோனா தொற்றின் 2-வது மற்றும் 3வது அலைகளை சமாளிக்க தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. இதில் 11.07 கோடி தடுப்பூசி போடப்பட்டதால் தான் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தக்காளி வைரஸ் காய்ச்சல் குறித்து பயப்பட தேவையில்லை. யாருக்காவது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பித்தாலே என்ன காய்ச்சல் என்பது தெரிந்து விடும்.
குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சரிடம் கூறி ரூ.5 கோடி நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். பழங்குடியினருக்கு வரும் சிக்கிள் செல் அனீமியா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மரபு வழி நோய்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உறவு முறையில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும். மரபு வழி இல்லாதவர்களுக்கு பரிசோதனை மூலம் வராமல் தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.