Breaking News :

Tuesday, April 23
.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நடிகர் நாசர்


தமிழ் திரையுலகின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தலைவராகவும், நடிகர் நாசர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினராக கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருது தொகையாக ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும். இந்த விருதினை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர் விருதாளரை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் உறுப்பினராக நியமித்ததற்காக நன்றி கூறும் விதமாக முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில், “பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும். பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டு வரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி.

கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி. கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.