அழகைப் பார்த்து மதிப்பீடு செய்யாதே - குட்டிக்கதை

By சரவணன்

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அதில் சோமு, சிண்டு  என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது 
ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம் என்றான், என்கிட்டேயே சவால் விடறியா  இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து "ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான் ; அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம்" என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும்  குளத்துக்குள் வேகமாகச் சென்றன.

அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்ற போது  "பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க?" என ஒரு பெரிய மீன் கேட்டது.

"கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு ? அதான்..." என்றன.
"ஓ....! காகமா, அதால நமக்கு எந்த ஆபத்தும் இல்லே. உருவத்தை மட்டுமே வெச்சு ஒருத்தரைப் பற்றி தப்பா நினைக்கக் கூடாது" என்று அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் "இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான், வாங்க போகலாம்." என கூறி சென்றது.

அடுத்த நாள் வந்தது;  குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது; அதை பார்த்த மீன் குஞ்சுகள், " ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா கச்சிதமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன்."
 மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள்; "அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?" என்றது.
கொக்குக்கு ஒரே கொண்டாட்டம் ;  "ஓ! தொட்டுப் பாரேன்" என்றது.

ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. "நல்லா மாட்டினியா?" என்றது.  மாட்டிய மீன் "ஆ! என்னை விட்டு விடு!" என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் "ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க!" என்று குளத்திற்குள் சென்றன.

அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.
மற்ற மீன் குஞ்சுகள் ; "அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்!  ஆமாம்!" என்று உறுதியெடுத்துக் கொண்டன.

அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோசமாக வாழ்ந்தன.

~மகிழா. 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE