நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது! - காஞ்சி மகா பெரியவா

By சரவணன்

மௌனவிரதம் இருந்தபோதிலும் ஒரு மட்டைத்தேங்காயை உருட்டிவிட்டு பக்தனின் சங்கடத்தைப் போக்கிய   பெரியவா.

பல கட்டுரையாளர்கள் அனுபவித்த கடம் வித்வான் விநாயக ராமின் அற்புத கட்டுரை.

கடம் வித்வான் விநாயக ராம்,தன்னோட குலதெய்வத்துக்கு சமமா காஞ்சி பரமாசார்யா மேல பக்தி உள்ளவர்.

ஒரு சம்யம்,ஏதென்ஸ் நாட்டுல கடம் வாசிக்கறதுக்கு வாய்ப்பு வந்தது அவருக்கு. அவரோட வயலின் வித்வான் எல். சுப்ரமண்யமும் ,தபேலா வித்வான் ஜாஹீர் உசேனும் பங்கெடுத்துக்க இருந்த பிரமாண்டமான இசை நிகழ்ச்சி அது.

நிகழ்ச்சிக்கு ரெண்டு நாள் முன்னாலயே ஏதென்ஸுக்கு விநாயகராம் வந்துடறதுன்னும், மத்தவா ரெண்டுபேரும் லண்டன்ல ஒரு கச்சேரியை முடிச்சுட்டு அங்கேர்ந்து ஏதென்ஸுக்கு வர்றதாகவும் ஏற்பாடு செஞ்சிருந்தா.

குறிப்பிட்ட நாள்ல ஏதென்ஸுக்குப் போய் சேர்ந்தார், கடம் வித்வான். விமானத்துல போய் இறங்கினவரை சகல மரியாதையோட அழைச்சுண்டு போய் பெரிய ஓட்டல்ல தங்கவச்சா,நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தவா. நாளை மறுநாள்தான் கச்சேரி.இங்கே சகல வசதியும் இருக்கு. அதனால நீங்க நன்னா ஓய்வெடுத்துக்குங்கோ!" அப்படின்னுட்டு வந்தவா புறப்பட்டுட்டா.

கொஞ்சநாழி ஆச்சு. தெரியாத நாடு.புரியாத இடம். சும்மா உட்கார்ந்து இருக்கிறதைவிட கொஞ்சநாழி கடம் வாசிச்சுண்டு இருந்தா, சொந்த ஊர்ல இருக்கறாப்புல மனசுக்கு இதமா இருக்கும்னு நினைச்சுண்டு, கடம் இருந்த பெட்டியைத் திறந்தார், வித்வான்.

அடுத்த கணம், அவருக்குக் கண் இருட்டித்து,ஏ.சி.க் குளிரையும் தாண்டிண்டு உடம்பு குப்புன்னு வியர்த்தது. கத்தறதா,அழறதா? ஒண்ணும் புரியாம விக்கிச்சுப்போய் நின்றார்.விக்கு விநாயகராம் ஏன்னா,பெட்டிக்குள்ள அவரோட வாத்யம் சுக்கு நூறா உடைஞ்சு கிடந்தது.

நொறுங்கிப் போய் கிடந்த கடத்தைப் பார்த்த நொடியே அவரோட மனசும் முழுசா நொறுங்கிடுத்து. இந்தியாவிலேயே இருந்தாலும் கூட நல்லதா ஒரு கடம் வேணும்னா சட்டுனு கிடைச்சுடாது. அப்படி இருக்கறச்சே, கடல்கடந்து எங்கேயோ இருக்கிற நாட்டுல கடம் எப்படிக் கிடைக்கும்? அவ்வளவுதான் வாத்யமும் போச்சு வாய்ப்பும் போச்சு! கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்துண்டு இருந்தவர், மனசைத் தேத்திண்டு, தன்னோட ஆத்துக்காரிக்குப் போன் செஞ்சார்.நிலைமையைச் சொல்லி, ஒப்பந்தத்தை ரத்து பண்ணி வந்துடறேன்னார்.

"அவசரப்படாதீங்கோ, நான் உடனே மடத்துக்குப்போய் மகாபெரியவாளைப் பார்த்து வேண்டிக்கறேன்! நாம தெய்வமாக கும்பிடற அவர் நம்மைக் கைவிட மாட்டார்! -இது மனைவி
அங்கே வித்வானுக்கு ஒண்ணும் புரியலை.சட்டைப்பையில் வைச்சுண்ட இருந்த பெரியவாளோட படத்தை எடுத்து கையில் வைச்சுண்டு பிரமை பிடிச்சமாதிரி உட்கார்ந்திருந்தார்.மற்ற வாத்தியக்காரர்களுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னார். அவாளுக்கு அதிர்ச்சி இருந்தாலும், ' நாங்க வர்ற வரைக்கும் அங்கேயே இருங்கோ,வந்தபிறகு பேசிக்கலாம்' என்று சொன்னார்கள்.இவர் பெரியவா நாமத்தையே மந்திரமா ஜபிச்சுண்டு இருந்தார்.

வித்வானோட மனைவி மடத்துக்குப் போன சமயத்துல மகாபெரியவர் மௌனவிரதத்துல இருந்தார். ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு,தன்னோட ஆத்துக்காரர் அயல் தேசத்துல கடம் உடைஞ்சு சங்கடப்படறதை ஆசார்யாகிட்டே அழுதுண்டே சொன்னார். வித்வானோட மனைவி.

எல்லாத்தையும் கேட்டுண்ட மகாபெரியவா,மட்டைத் தேங்காய் ஒண்ணை எடுத்து உருட்டிவிட்டார்.அவ்வளவுதான். வேற ஒண்ணும் சைகை கூட காட்டலை.ஒண்ணும் புரியாம கண் கலங்கிண்டே வித்வானோட மனைவி நகர ,அதே நேரம் அங்கே ஏதன்ஸ்ல ஒரு அதிசயம் நடந்தது.
ஏதென்ஸ் வந்த வயலின் வித்வானும், தபேலா வித்வானும் ஒரு கடத்தை எடுத்துண்டு வந்து,வித்வான் விநாயகராம் முன்னால வைச்சா. அதைப் பார்த்ததுமே சந்தோஷத்துல கண்ணுலேர்ந்து அருவி மாதிரி ஜலம் கொட்ட, "இது எப்படிக் கிடைச்சுது?"ன்னு தழுதழுப்பா கேட்டார் வித்வான்.

"லண்டன்ல எங்கேயாவது கடம் கிடைக்குமான்னு விசாரிச்சோம் ஒரே ஒருத்தர்கிட்டே இருக்கிறதா தகவல் கிடைச்சுது. அவரைத் தேடிப்போய் கேட்டோம்.தன்கிட்டே கடம் இருக்கிறதாகச் சொன்னவர், தான் இந்தியா வந்த சமயத்துல பெரிய வித்வான் ஒருத்தர், தனக்கு அதை பரிசாகக் குடுத்ததாகவும் அதைத் தரமுடியாதுன்னும் சொல்லிட்டார்.

வேறவழி எதுவும் தெரியாம என்ன பண்றதுன்னு தவிச்சோம். அந்த சமயத்துல யாரோ உந்தினாப்புல அவருக்கு கடத்தை பரிசா குடுத்தவர் யார்னு கேட்கணும்னு தோணித்து.கேட்டோம். " த க்ரேட் கடம் ப்ளேயர் விக்கு விநாயகராம்!" அப்படின்னார். எங்களுக்கு ஆச்சரியம் தாங்கலை. நீங்கதான் கடம் உடைஞ்சுபோய் சங்கடத்துல இருக்கேன்னு அவர்கிட்டே சொன்னோம். கடத்தை சந்தோஷமா குடுத்துட்டார்."

கடத்தை வாங்கிக் கண்ணுல ஒத்திண்டார், வித்வான். அதுக்குள்ளே ஏதோ காகிதம் மடிச்சு வைச்சிருக்க, அதை எடுத்துப் பிரிச்சுப் படிச்சார். அதுக்குள்ளே, "நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!" அப்படின்னு இங்கிலீஷ்ல எழுதி இருந்தது.

தன்னோட ஆத்துக்காரிக்கு போன் பண்ணினப்போ, அவ சொன்ன அதே வார்த்தைகள்.
நான் எப்பவோ யாருக்கோ குடுத்த கடம், இப்போ தன்னோட சங்கடத்தைப் போக்க தனக்கே திரும்பக் கிடைச்சிருக்கு. எல்லாம் மகாபெரியவா அனுகிரகம்! புரிஞ்சுண்ட கடம் வித்வான், இருந்த இடத்துலயே பரமாசார்யாளை நினைச்சுண்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சார்.

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE