ஆலமரம் சொல்லும் வாழ்க்கையின் ஒழுக்கம்!

By சரவணன்

விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.
அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.

இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, "இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது.

ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது. அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , "இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,
இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.

தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.

நாம் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில ஒழுக்க கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்....?

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE