நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி கோயில், ராஜபாளையம்

By nandha

இறைவனுக்கு ஏழை – பணக்காரன், படித்தவன் – பாமரன் போன்ற பேதங்கள் ஏதும் இல்லை. அதனால் தான் இறைவனுக்கு படைக்ககூடாத நைவேத்தியம் ஆன காட்டுப்பன்றி இறைச்சியை வேடுவ குலத்தில் பிறந்த கண்ணப்பர் படைத்த போது அதை பக்தியுடன் ஏற்றார். மேலும் தனது கண்களையே கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கொடுத்த போது மீண்டும் கண்பார்வை வழங்கினார். அது போன்றே மன்னன் ஒருவனின் குறைபாட்டை தீர்த்த தேவதானம் “அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில்” சிறப்புக்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் வரலாறு

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இந்த அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் மூலவர் மற்றும் உற்சவர் நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் தவமிருந்த நாயகி என்கிற பெயரில் வணங்கப்படுகிறார். தல விருட்சமாக நாகலிங்க மரம் இருக்கிறது.

வரலாறு படி சிறந்த சிவபக்தனானான வீரபாகு பாண்டியனை போரில் வெல்ல முடியாத விக்கரமசோழன் தந்திரத்தால் வீரபாகு பாண்டியனை கொல்ல வீரபாகுவுடன் சந்தனம் செய்து கொள்ள விரும்புவதாகவும். அதற்கு அடையாளமாக வீரபாகு சோழன் எரிந்து போகும் படியான ஒரு நச்சு ஆடையை பரிசாக நயவஞ்சகமாக தனது சேவகனிடம் கொடுத்து அனுப்பினான். தனது சிவபக்தியால் இந்த ஆபத்தை முன்னரே உணர்ந்த வீரபாகு, அந்த நச்சு ஆடையை தான் அணிந்து கொள்ளாமல், சோழனின் சேவகனுக்கே அணிவித்தான். சிறிது நேரத்தில் உடல் பற்றியெறிந்து அந்த சேவகன் மாண்டான்.

இந்நிகழ்விற்கு பிறகு பாண்டியனை காப்பாற்றிய சிவபெருமானுக்கு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்கிற பெயர் ஏற்பட்டது. அதே வேளையில் சிவனின் கோபத்தால் விக்கிரமசோழனுக்கு கண்பார்வை பறிபோனது. தன் தவறை உணர்ந்து வீரபாகு பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, இந்த தேவதான கோயிலில் வந்து வழிபட்ட போது ஒரு கண் பார்வை மட்டும் கிடைத்தது. மற்றொரு கண்பார்வையும் கிடைக்க இறைவனிடம் வேண்டிய போது இவ்வூருக்கருகில் மேலும் ஒரு கோயில் எழுப்பினால் மற்றொரு கண்பார்வையும் கிடைக்கும் என அசரீரி கூற, அருகிலிருக்கும் சேத்தூர் என்கிற ஊரில் விக்கரமசோழன் கோயில் எழுப்ப, அவனுக்கு மற்றொரு கண்பார்வையும் கிடைத்தது.

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் சிறப்புக்கள்

பஞ்ச பூத சிவஸ்தலங்களான காஞ்சிபுரம், காளஹஸ்தி, திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய தலங்களை ஒரே நாளில் தரிசிக்க முடியாது. ஆனால் இந்த கோயில் இருக்கும் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் சங்கரன்கோயில், தாருகாபுரம், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய பஞ்சபூத சிவன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்க முடியும் என்பது சிறப்பு.

குழந்தை பேறில்லாத பெண்கள் தலைக்கு ஊற்றி குளித்து விட்டு இக்கோயிலுக்கு தங்களின் கணவர்களோடு சென்று கோயில் வளாகத்தில் தல விருட்சமாக இருக்கும் நாகலிங்க மரத்தில் மூன்று நாகலிங்க பூக்களை பறித்து ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்த பூக்களை பிரசாதமாக பெற்று, மூன்று இரவு தம்பதிகள் பசும்பாலில் கலக்கி குடித்து வந்தால் விரைவிலேயே குழந்தை பிறக்கும் என்பது அனுபவம் பெற்றவர்களின் கருத்துக உள்ளது.

கண்களில் ஏற்படும் எத்தகைய நோய்கள் மற்றும் குறைபாடுகள் தீர இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு அது நீங்குகிறது. உடலில் காயங்கள் ஏற்பட்டு சிலருக்கு தழும்புகள் ஏற்பட்டு அவலட்சணமான தோற்றத்தை தருகிறது. இங்கு வந்து வழிபாடும் அத்தகைய தழும்புகள் நீங்குவதாக கூறப்படுகிறது.

கோயில் அமைவிடம்

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் வட்டத்திலிருக்கும் தேவதானம் என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில்

தேவதானம்

ராஜபாளையம் வட்டம்

விருதுநகர் மாவட்டம் – 626145

.
மேலும்