மும்மூர்த்திகளின் ஸ்தலங்கள் எங்கு உள்ளது?

By நந்தா

1. கன்னியாகுமரி மாவட்டம்  #சுசீந்திரம்  தாணுமாலய. சுவாமி  கோயிலில் (தாணு= ,சிவன், மால்=  திருமால்,  அயன்= பிரம்மா) மும்மூர்த்திகளும்  இணைந்து  ஒரே வடிவமாக கொன்றை மரத்தடியில்  அருள்பாலிக்கின்றனர்.  அத்திரி மகரிஷியின்  மனைவி   அனுசுயா  தன் கற்பின் திறத்தால்  மும்மூர்த்திகளையும்  குழந்தைகளாக்கி,  இக் கொன்றை மரத்தில்  தொட்டில் கட்டி ஆட்டினாளாம்.   அகலிகையின் காரணமாகச் கௌதம முனிவரிடம்  சாபம் பெற்ற இந்திரன்  இங்கு வந்து மும்மூர்த்திகளையும்  வழிபட்டு  சுத்தமடைந்தத்  தலமாதலால்  இத்தலம்  #சுசீந்திரம்  எனப்பட்டது. இன்றளவும் இரவில்  மானிடரின் கண்களுக்குத்  தெரியாமல்  இந்திரன்  சுசீந்திரத்திற்கு வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

2 . திருச்சி_உத்தமர்_கோயிலில் திருமால்,  புருஷோத்தமராகச்  சயனக் கோலத்திலும்,  சிவபெருமான் பிக்ஷாடனராகவும், பிரம்மா,  மனைவி சரஸ்வதியோடும்  அருள்பாலிக்கின்றனர். பிரம்மாவின்  ஐந்தாவது சிரசைக்  கொய்ததால் பிரம்மஹத்தித்  தோஷத்திற்கு ஆளான  சிவபெருமான்,  இத்தலத்திற்கு வந்து  மகாலட்சுமியிடம்   மண்டையோட்டில் பிச்சைப் பெற்று ,  பிரம்மஹத்தித்  தோஷம்  நீங்கினாராம்.  எனவே தான்  சிவபெருமான்  இங்கே  பிக்ஷாடனராகக்  காட்சியளிக்கிறார். இத்தலத்தில்  மும்மூர்த்திகளையும்  வேண்ட,  நாம்  வேண்டியது  நிறைவேறுவது உறுதி.

3. தஞ்சாவூர் மாவட்டம்  திருக்கண்டியூரில்   மும்மூர்த்திகளுக்கும்  கோயில் இருக்கின்றன. சிவபெருமான்  வீரட்டேஸ்வரராகவும்,  திருமால்  ஹரசாப விமோசனப்  பெருமாளாகவும்,  பிரம்மா,  மனைவி  சரஸ்வதி தேவியோடும்  காட்சியளிக்கின்றனர்.
4.ஈரோடு அருகிலுள்ள  கொடுமுடியில். சிவபெருமான்  லிங்க வடிவத்தில் மூலவராகவும்,  திருமால்  அரங்கநாதராகவும்,  பிரம்மா வன்னி மரத்தடியிலும்  காட்சித் தருகின்றனர்.

5.கோவை அருகிலுள்ள திருமூர்த்தி  அமணலிங்கேஸ்வரர் கோயிலில். பிரம்மா,  விஷ்ணு,  சிவபெருமான்  மூவரும்  ஒரே  லிங்க வடிவாக உள்ளனர்.

6. கடலூர் மாவட்டம் சிதம்பர நடராஜர்  கோயிலில்  மூலட்டானேஸ்வரராகச்  சிவபெருமானும்,  பள்ளிக்கொண்ட நிலையில்  கோவிந்தராஜ  பெருமாளும்,  பிரம்மா  தனியாக ஒரு சந்நிதியிலும்  காட்சியளிக்கின்றனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE