உடையீஸ்வரர், இளநகர்

By செய்திப்பிரிவு

இக்கோயிலில் திருப்பணி செய்தபோது, நந்தி சிலை ஒன்று கிடைத்தது. அதை கோயில் முன்பாக வைத்து விட்டனர். 

ஒருசமயம் நிறை மாத கர்ப்பிணி  அம்பிகையை வழிபட வந்தாள். 

அவளுக்கு களைப்பாக இருக்கவே, இந்த நந்தியின் மீது தலை சாய்த்தாள். சிறிது நேரத்தில் நந்தி சிலை கொஞ்சம், கொஞ்சமாக நகரவே, அந்த பெண் தடுமாறி தரையில் சாய்ந்தாள். 

அப்போது அவளுக்கு சுகப்பிரசவமாகி ஒரு ஆண் குழந்தைபிறந்தது. அப்போதிருந்து இந்த நந்தி சுகப்பிரசவ நந்தி எனப்பட்டது. அம்பிகையும் சுகப்பிரசவ நாயகி என்று பெயர் பெற்றாள். 

சுகப்பிரசவம் ஆவதற்கு கர்ப்பிணிகள் இங்கு அம்பிகையை வழிபட்டு, பிரசவ நந்தி சிலையை சற்று தள்ளி வைத்து செல்கின்றனர்.

அவர்களுடன் துணைக்குச் செல்பவர்கள், நந்தியை மீண்டும் பழைய நிலையில் திரும்பவும் வைக்கின்றனர். 

இவ்வாறு செய்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.தாமரை பீடத்தில் காட்சி தரும் சுவாமி செம்மண் லிங்கமாக இருந்தாலும், அபிஷேகம் செய்யும்போது கரையாதிருப்பது கலியுக அதிசயம். 

இந்த லிங்கத்தில் ஏர்க்கால் பட்ட தடம் இருக்கிறது. லிங்கத்தின் மத்தியில் மற்றொரு லிங்கம் இருப்பதைப்போன்ற அமைப்பும் இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் 25 கி.மீ., தூரத்தில் கோயிலை அடையலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE