திருமலை திருப்பதியில் சில்லரை எண்ண அதிநவீன இயந்திரம்

By

திருப்பதியில் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் அளிக்கும் காணிக்கைகள் அங்குள்ள உண்டியல்களில் செலுத்தப்படுகிறது. 

உண்டியல்களில் தினந்தோறும் சேரும் சில்லரை நாணயங்களை தேவஸ்தான ஊழியர்களால் எண்ணப்பட்டு வந்தது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பக்தர் 10 கோடி ரூபாய் செலவில் கோவில் வளாகத்தில் புதிய கட்டடம் கட்டி தந்தார். அதில் சில்லரை நாணயங்களை எண்ண, தலா 2.80 கோடி மதிப்புள்ள இரண்டு நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வாங்கிய இந்த நவீன இயந்திரங்கள் 13 வகையான நாணயங்களை தனித்தனியாக பிரித்து எண்ணி, 'பேக்கிங்' செய்து விடும். கோவிலில் இருந்து புதிய கட்டடத்திற்கு நாணயங்களை கொண்டு செல்ல இரண்டு கிரேன்களும் வாங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த அதிநவீன கண்காணிப்பு கேமரா, குண்டு துளைக்காத கண்ணாடிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வாயிலாக நாணயங்கள் எண்ணப்படுவதை கண்ணாடிக்கு வெளியே இருந்து பக்தர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் நேற்று முன்தினம் 73 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37 ஆயிரத்து 68 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல்களில் 4.09 கோடி ரூபாய் வசூலானது குறிபிடத்தக்கது. 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE