சென்னையில் ஒரு மலைக்கோயில் - திருநீர்மலை பெருமாள்

By

சென்னை அருகேயுள்ள பல்லாவரதிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில். 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.

இத்தலத்துள்ள பெருமாளைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. 

ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். 

தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் “நீர்வண்ணப்பெருமாள்,” இருந்த கோலத்தில் “நரசிம்மர்,” சயன கோலத்தில் “அரங்கநாதர்,” நடந்த கோலத்தில் “உலகளந்த பெருமாள்” என நான்கு கோலங்களையும் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், அரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.

இத்தலத்தின் குளத்தில் நீராடி, பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் சித்தம் தெளிந்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிவலம் செய்தும் வழிபடுகின்றனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE