மஹாதேவனின் மாணிக்க மகனே.. பழநி முருகா!

By சரவணன்

பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியனே,
பார்வதி பரமேஸ்வரரின் புத்திரனே,
பார் புகழும் புண்ணியனே,
பழமுதிர் சோலையில் அருளும் ஞானப்
பண்டிதனே!
பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்து
பல்சுவை கருத்தாழம் மிக்க பாக்களை
பாட அருளி தமிழின் புகழை சிகரமடைய
செய்வாயே!

திருச்செந்தூர் செந்தில் நாதா,
திருப்பாற்கடலை கடைந்த மாயோன் மருகா
திருப்புகழ் விளக்கப் பேச்சில் மகிழ்பவனே,
திருமுருகாற்றுபடை போற்றும்
திரு விராலிமலை வீரா,
திருப்பறங்குன்றத்தில் தெய்வானையை
திருமணம் கொண்டு அருள்பாலிக்கும்
திரு சுப்பிரமணிய பெருமானே!
திருவருள் அமுத மழை பொழிவாயே!

கந்தக்கோட்ட கருணாமூர்த்தி கந்தனே,
காண்பதெல்லாம் உன்தன் கண் விழியாலே
கற்பதெல்லாம் உன்தன் வாய்மொழியாலே
காங்கய நல்லூர் பிள்ளைப் பெருமானே,
குன்று தோறும் குடி கொண்ட குமரா,
குற்றம் குறைகளை மன்னிக்கும் குருபரனே
குமரக்கோட்ட தவமணி முத்தமிழ் தலைவா
குன்றக்குடி புகழ் வேலா மயிலா,
குலம் காக்கும் கார்த்திகையா, எங்கள்
குடும்பம் தழைத்தோங்கி வாழ அருள்வாயே

மருதமலை மாமணியே முருகய்யா,
மஹாதேவனின் மாணிக்க மகனே,
மண்மீதிலே மாமலை தெய்வமே,
மனதுக்கு இனியானே,
மனதை தூய்மை படுத்தும் ஞானப்பண்டிதா
மாயயை வெல்லும் மந்திரம் புகல்வாயே ,
மங்களங்கள் எங்கும் நிலைத்திடுவாயே,
மாண்புடன் வாழ அருள்வாயே!

ௐ முருகா ௐ!
ௐ சரவணபவ ௐ! 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE