எந்த கெடுதலும் உன்னை நெருங்க முடியாது - ஜெய் சாய்ராம்

By சரவணன்

உனது கவலைகளுக்கு காரணம், உனது கர்மவினை என்றேன், நீயோ நான் ஏதும் பாவம் செய்யவில்லையே, எந்த வகையிலும் தவறு செய்யவில்லையே என்றாய், நீ இந்த ஜென்மத்தில் எதையும் செய்யவில்லைதான், ஆனால் இதற்கு முந்தைய ஜென்மங்கள் எப்படி இருந்தன என்பது உனக்கு தெரியாதே! அதன் விளைவுகளாகக் கூட இந்த துன்ப நிலை என்பதை நீ உணர்ந்து கொள்ளலாமே!

பழைய ஜென்ம விஷயங்களைச் சொல்லி என்னை சமாதானபடுத்த நினைக்காதீர்கள். இதற்கு என்ன காரணம் என்பதை சொல்லிவிடுங்கள் என நீ கேட்கலாம். இறைவனின் திருவிளையாடல் உனது வாழ்வில் நடப்பதற்காகவும் நீ துன்பத்தை ஏற்கவேண்டிய நிலை உள்ளது என்பதை மறக்காதே! அப்படியானால் என் கஷ்டம் தொடர்கதையாக இருக்கப் போகிறதா, என கேட்க தோன்றுகிறதா! நிச்சயமாக இல்லை.

எப்போது நீ என்னை உறுதியாகப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தாயோ, அப்போதே நீ விடுதலையின் படியில் காலை வைத்துவிட்டாய் என்பதை உறுதியாக நம்பு. அப்படியானால் உனக்கு விடுதலை உறுதியல்லவா.

இந்த சாயி உம்முடைய வியாதியையும் வலியையும் பிரச்சினை போன்ற எதையும் நிர்மூலமாக்கி விடுவான். அனைவர் மீதும் கருணைகொண்ட இந்த பக்கீர் அன்புடன் உன்னையும் பாதுகாப்பான்.

இப்போது நீ பிரச்சனைகள் தடங்கல்கள் எனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம், துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம். அதைப்பற்றி வருத்தப்படாதே!

அமைதியாயிரு! நம்பிக்கையோடு என் நாமத்தை இடைவிடாது சிந்திப்பவர்கள் துக்கப்படுவது இல்லை. என் மீது விசுவாசம் கொண்ட உனது துக்க நாட்களை முடித்து வைக்க எனக்கு வெகுநேரம் ஆகாது. எனது ஆலய படிகளில் கால் வைத்த பிறகு நீ சுகத்தின் மீதுதான் சவாரி செய்யப்போகிறாய்.

எனது நாமம் உனது உள்ளத்திலும், எனது யோக சக்தியான உதி உன் நெற்றியிலும் இருக்கும் வரை எந்த கெடுதலும் உன்னை நெருங்க முடியாது.

ஜெய் சாய்ராம்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE