வராஹ பெருமாளின் பெருமை!

By சரவணன்

தசாவதாரங்களுக்குள் இந்த ஸ்ரீ வராஹாவதாரத்தில் ஈஸ்வர ரக்ஷகத்வமான அனைத்துலகும் காக்கும் இயல்பு விளக்கப்படுகிறது.

மத்ஸ்யாவதாரத்தில் சோமகாசுரனை வதைத்து வேதத்தை மீட்டு கொணர்ந்து, நான்முகனுக்கு அளித்ததால் வித்யாதாநப் ப்ராதாந்யம் விளங்கும் .

கூர்மாவதாரத்தில் மந்தரமலை முழுகிவிடாமல், ஆமை வடிவம் கொண்டு தாங்கி திருபாற்கடலில் தோன்றிய அமிர்தத்தைத் தேவர்களுக்கு அளித்தாராதலால் இதில் தேவர்களுக்கு உபகாரகனாய் நின்ற நிலை விளங்கும்.
நரசிம்மாவதாரத்தில் பரமபாகவதானகிய ப்ரஹ்லாதனுக்காக எங்கும் நிறைந்து நின்று, தூணிறேன்றி ஹிரணியனை வதைத்ததால் இதில் பாகவதனுக் கனுக்ரஹம் செய்தமையும் வ்யாபகத்வமும் விளங்கும்.
வாமனாவதாரத்தில் தன்னியல்பிற்கு ஒவ்வாத இரத்தல் தொழிலை மேற்கொண்டு தாங்கி மகாபலியிடஞ் சென்று மூவடி மண் வேண்டித் திரிவிக்ரமனாய், உலகமனைத்தும் திருவடியால் ஓடுக்கினதால் இதில் இந்திரனுக்கு உபகரித்ததும் வியாபகத்வமும் புலனாகும்.

பரசுராமவதாரத்தில் துஷ்டர்களை ஸம்ஹரித்ததனால் இதில் துஷ்ட நிக்ரஹம் செய்தமை தோன்றும்.
ராமாவதாரத்தில், தேவர்களுக்கு விரோதியான இராவணாதியர்களை வதைத்ததனால் இதில் தேவ காரியம் செய்தமை போதரும்.

இவ்வெம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்த சரமச்லோகம் சீரிய கூரிய பொருளமைந்துள்ள தொன்றும்.
“ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோநர:|

தாதுஸாம்யே ஸதியேஸ்தி தேஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்”||
“ததஸ்தம் ம்ரியமாணம்ந்து காஷ்ட பாஷாண ஸந்நிபம்|
அஹம்ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்||”
– (வராஹ சரமஸ்லோகம்)

“என்னையே திடமாக கதியாகக்கொண்டு சரணமடைந்தவன் மரண காலத்தில் நினைவிழந்து கட்டையைப்போலும் கல்லைப்போலும் தன் சரீரத்தில் கிடக்கும் போது அவன் என்னை நினையாவிட்டாலும் நான் அவனை நினைத்து எல்லாவற்றிலும் உயர்ந்த கதியை அடைவிப்பேன்”

இவ்வாறு பிரளய வெள்ளங்கொண்ட பூமியைக் காத்தவரும் ஸாரமயமான அர்த்த விசேஷத்தை வெளியிடவரும் ஆழ்வாருக்கு ஞானப்பிரதானம் செய்தவருமாகிய ஸ்ரீ வராஹ பெருமாளே எல்லாருக்கும் ரக்ஷகராவர்.

அவ்வெம்பெருமானையேச் சரண் புகுந்து வாழ்வதே உலகுய்ய வழி என்ற சமயநெறியை வெளிப்படுத்தினார்.
இந்த வராஹவதாரத்தில் ப்ரளய வெள்ளங்கொண்ட பூமியை எடுத்து ரக்ஷித்தானாதலால் இதில் ரக்ஷகத்வ தர்மம் வெளிப்படையாகத் தோன்றும்.

 இதுபோல ஏனைய அவதாரங்களில் ரக்ஷகத்வ தர்மம் அவ்வளவு தெளிவாகத் தோன்றவில்லையாதலால் “ஞானப்பிரானை யல்லாலில்லை நான் கண்ட நல்லதுவே” என்றருளிச்செய்தார்.

கிருஷ்ணாவதாரத்தில் சிற்சிலவிடங்களில் தன்னரிய செயலை வெளிப்படுத்தி கம்ஸனை வதைத்துத் திரெளபதிக்காக பாண்டவர்கட்குச் சகாயமாகவிருந்து , பாரதப்போரை முடித்தானாதலால் ஆச்ரித பாரத பாரதந்தர்யமும், துஷ்ட நிக்ரஹமும் வெளியாகும்.

ஸ்ரீ வராஹ பெருமாள் பிரளய வெள்ளத்தில் பாசி தூர்த்துக் கிடந்த பூமிப்பிராட்டியைக் கொம்பினால் கீண்டெடுத்து இளைப்பாற்றி ஞானோபதேசஞ் செய்தாராதலால் ஞானப்பிரானென வழங்கப்பட்டார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE