கோயிலுக்குச் சென்றால் சிறிது நேரம் அமர வேண்டுமா?

By தேஜஸ்

இந்து மதத்தில் கோயிலுக்குச் செல்ல வேண்டியது ஒருவரின் சுய விருப்பத்தின்பேரில் நடைபெறுவது. இங்கு மத ரீதியான எந்த ஒரு கடமையும், எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஒருவர் கோயிலுக்குச் செல்ல வேண்டும் 

என்றால்,  அவருக்கு விருப்பம் இருந்து செல்ல வேண்டும். இறைவனின் மீதான ஒருவரின் ஈர்ப்பு அவரது மனதில் இருந்து வர வேண்டும். யாரும் கட்டாயப்படுத்தி வருவதன் பெயர் பக்தி ஆகாது. அது வெறும் கடமை மட்டுமே!

அடிக்கடி கோயிலுக்குச் செல்பவர்கள் இறைவனின் மீதான நாட்டத்தின் பேரில் செல்கின்றனர். கோயிலுக்குச் செல்லும் நபர் இறைவனை தரிசித்து தங்களது  வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். அதன் பிறகு கோயிலின் பூசாரி கொடுக்கும் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு, கோயில் பிராகாரத்தை ஒரு முறையோ அல்லது மூன்று  முறையோ சுற்றி விட்டு வந்து இறுதியில் கோயிலின் முற்றத்திலோ அல்லது படிக்கட்டிலோ அமர்வார்கள்.

இப்படி அமரும்போது, மெய்மறந்து தங்களுக்குள் ஒரு அமைதியான மனநிலை ஏற்படும். பலர் கோயில் முற்றத்தில் அமர்ந்தவாறு தங்களது வேண்டுதல்களை கண்களை மூடி மீண்டும் ஒருமுறை வேண்டிக் கொள்கின்றனர்.

 ஒருசிலர் சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்கின்றனர். பக்திப் பாடல்களைக் கற்ற சிலரோ, மந்திரங்களையோ அல்லது இறைவனைப் போற்றும் பாடல்களையோ பாடி தங்களது இருப்பை இறைவனுக்குத் தெரிவிக்கின்றனர்.

கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தவுடன், உடனடியாக கோயிலை விட்டு வெளியே வரக்கூடாது. கோயிலைச் சுற்றி முடித்துவிட்டு படிகளில் அமர்வது சிறப்பான ஆன்மிக அனுபவத்தைத் தரும். கோயிலின் படிகளில் அமர்வதற்குப் பின்னால் ஒரு ரகசியம் மறைந்திருக்கிறது.எந்த ஒரு செயலையும் அவசர அவசரமாக செய்து விட்டால், அது முழுமையான செயலாக இருக்காது. இதே விஷயம் ஆன்மிகத்தில் நமது பிரார்த்தனைகளுக்கும் பொருந்தும்.

அவசர அவசரமாகக் கோயிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு விட்டு, அப்படியே வேகமாக வீட்டிற்குச் செல்வதும் சரியானதாக இருக்காது. இறைவனிடம் நாம் வைக்கும் வேண்டுதல்களுக்கு சரியான அளவில் அழுத்தம் கொடுக்க வேண்டும். கருவறைக்கு முன்பு நின்று இறைவனை வேண்டி விட்டு, கோயில் பிராகாரத்தை சுற்றி வரும்போது, முழுமையாக நமது வேண்டுதல்கள் மீது கவனத்தை வைத்து நடந்து வர வேண்டும்.

பிறகு கோயிலில் அமரும்போது, இந்த வேண்டுதல்கள் பற்றிய சிந்தனைகளும், அது நிறைவேற வேண்டும் என்ற எண்ணமும் மனதில் நிரம்பி இருக்க வேண்டும். கோயில் படி என்பது இறைவனின் பாதத்திற்கு ஒப்பானது. 

அப்படிப்பட்ட கோயில் படிகளில் அமர்ந்து வேண்டிக்கொள்வது, இறைவனின் பாதத்தைப் பிடித்து வேண்டுவதற்கு ஒப்பானதாகும். இறைவனின் பாதங்களில் அமர்ந்து வேண்டுதல்களை வைக்கும் போது அவர் நிச்சயம் பக்தர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார். இறைவனிடம் முழுமையாக சரணடைந்ததிற்கு ஒப்பாக இது பார்க்கப்படுகிறது. இதனால், இறைவனும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்

சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார்  பொற் பாதங்கள் சரணம்

சித்தமெல்லாம் சிவ மயமே

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE