அஷ்ட பைரவ லிங்கங்கள் - கும்பகோணம்

By நந்தா

தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அருகே இருக்கிறது கூனஞ்சேரி. கும்பகோணம் சுவாமிமலையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய இந்த கிராமத்தின் நடுவில் எழிலுற அமைந்திருக்கிறது கயிலாயநாதர்கோயில்.

உடல் குறைபாடுகள், கூன் போன்ற பிரச்னை உடையவர்கள், *தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்கே வந்து நல்லெண்ணெய் மற்றும் விபூதியால் அஷ்ட பைரவ லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து எட்டு வகை மலர்களாகிய மல்லி, முல்லை, வெள்ளை அரளி, சிகப்பு அரளி, பச்சை, மரிக்கொழுந்து, தாமரை, செவ்வந்தி ஆகியன கொண்டு லிங்கங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அப்படி அபிஷேகம் செய்விக்கப்பட்ட நல்லெண்ணெய் மற்றும் விபூதியை பக்தர்கள் வாங்கிச் சென்று, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்துக் குளிக்க வேண்டும். பின்பு அபிஷேக விபூதியை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். இதுபோல செய்துவந்தால், அவர்களின் உடல் குறைபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் என்பது நம்பிக்கை.


பழைமையான ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பை உடையன. அவற்றுள் உடல் நலம் பேண நாம் வழிபட வேண்டிய ஆலயங்கள் பல உள்ளன. அப்படி ஒரு ஆலயம்தான் கூனஞ்சேரியில் இருக்கும் கயிலாயநாதர் திருக்கோயில்.

முன்னொருகாலத்தில் வாழ்ந்த தானவ மகரிஷிக்கு பிள்ளைச்செல்வம் இல்லாமல் இருந்தது. அவர் ஈசனை வேண்டித் தவம் இருந்தபோது ஈசன் தோன்றி வரம் அருளினார். கூடவே அவர் வாழும் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு வேதம் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கட்டளையிட்டார். அதை மனமார ஏற்றுக்கொண்ட தானவர் குழந்தைகளை அழைத்துவந்து தன் வீட்டுத் திண்ணையில் வைத்துப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.
சில நாள்களில் அவர் மனைவி கருவுற்றார். தானவரும் அவர் மனைவியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

வளரும் கரு, தாயின் கருவில் இருந்தபடியே வேதங்களை சொல்லக் கேட்டு ஞானத்தை அறிந்து கொண்டது.
ஒருநாள், தானவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பில் ஒரு மாணவன் தூங்குவதைக் கண்டு அவனை எழுப்பித் திட்டினார். அப்போது, அவருடைய மனைவியின் வயிற்றில் கருவிலிருந்த குழந்தை, ‘இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து இப்படிப் பாடம் நடத்திக்கொண்டிருந்தால், சிறு பாலகன் தூங்காமல் என்ன செய்வான்?’ என்று மறு கேள்வி கேட்டது.

இதைக் கேட்ட முனிவர், அதிர்ந்துபோனார். அது தன் குழந்தை என்பதையும் மறந்து கோபம் கொண்டு, ‘பிறக்கும் முன்னரே, அதிகப் பிரசங்கித் தனமாக என்னைக் கேள்விகேட்ட நீ, கேள்விக்குறி போல வளைந்து அஷ்ட கோணல்களுடன் பிறக்கக் கடவது!’ என்று சாபமிட்டார்.

அவர் சாபம் பலித்தது. குழந்தை பிறக்கும்போதே கூனோடு பிறந்தது. பிற உடல் பாகங்களும் முறையாக இருக்கவில்லை. அதாவது அவர் உடலில் எட்டுவிதமான கோணல்கள் இருந்தன. அதனால் அவருக்கு அஷ்டவக்ர என்பதே பெயர் ஆனது.

ஆனால் அஷ்டவக்ரரோ பிறவி ஞானியாகத் திகழ்ந்தார்.

தானவர் ஒருமுறை அரச சபைக்கு விவாதம் செய்யப்போனார். ஆனால் அவரால் அரசவைப் புலவரை வெல்ல முடியவில்லை. தோல்வியைத் தழுவித் தலைகுனிந்து வந்தார். அப்போது அஷ்ட வக்ரர் சிறு பாலகன். தன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைப் பொறுக்க மனம் இல்லாமல் அரசவைக்குச் சென்று அரசவைப் புலவரை வாதத்துக்கு அழைத்தான். சிறுவனான அஷ்ட வக்ரரின் துணிவைப் பார்த்து வியந்த மன்னன் விவாததுக்கு ஏற்பாடு செய்தார்.

அனைத்து விவாதங்களிலும் வெற்றி பெற்றான் அஷ்டவக்ரன். அதிசயித்துப் போன மன்னர், பொற்காசு மூட்டைகளைப் பரிசாக வழங்கினார். பிறகு தன் தந்தையைச் சந்தித்து, அவரையும் அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான் அஷ்டவக்ரன்.

தானவர் அஷ்ட வக்ரரின் வரவைக் கண்டு மகிழ்ந்தார். என்றாலும் தன்னால் தன் பிள்ளைக்கு இப்படி ஒரு துன்பம் வந்துவிட்டதே என்று நினைத்து வருந்தினார். இதற்கு விமோசனமே கிடையாதா என்று ஈசனிடம் முறையிட்டார். அப்போது ஈசன் அசரீரியாக ‘கூனஞ்சேரி என்ற தலத்தில் இருக்கும் அஷ்ட பைரவ லிங்கங்களை பூஜை செய்துவந்தால், உன் மகனுடைய குறைகள் நீங்கும்’ என்று கூறி அருளினார்.
இறைவன் அருளியபடி தந்தையும் மகனும் கூனஞ்சேரி வந்து, அஷ்ட லிங்கங்களைப் பூஜிக்க, அஷ்டவக்ரனின் கூனல் நிமிர்ந்தது; குறைபாடுகள் நீங்கியது. இதனால் இவ்வூருக்கு ‘கூனல் நிமிர்ந்த புரம்’ என்றும் பெயர் உண்டானது.

கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் கொடிமரம், நவகிரகம் கிடையாது. கொடிமரம் இல்லாததால் இங்கே உற்சவங்கள் எதுவும் நடைபெறுவதும் இல்லை. எனவே உற்சவ மூர்த்தியும் கிடையாது. அபிஷேகங்கள், பூஜைகள், அர்ச்சனைகள் அனைத்தும் மூலவருக்குத்தான்.
கோயிலுக்குள் நுழைந்ததும், இரண்டு விநாயகர்கள் அருள்புரிய, அதைத் தாண்டியதும் அருள்மிகு கயிலாசநாதர் சந்நிதி. இக்கோயிலில் அருள்மிகு சௌந்தரநாயகி மற்றும் அருள்மிகு பார்வதி என இரண்டு தேவியர் எழுந்தருளியுள்ளனர்.

ஒரே பிராகாரம்தான். பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் சண்டிகேஸ்வரரும் இருக்க, ஈசான்ய மூலையில் அஷ்ட பைரவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எல்லா கோயில்களிலும் பைரவர் மேற்கு பார்த்திருக்க, இங்கே தெற்கு பார்த்திருக்கிறார். முருகன் சந்நிதியும் உள்ளது.

இங்கே இருக்கும் அஷ்ட பைரவ லிங்கங்கள் மிகவும் பழைமையானவை. பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகிய இந்த அஷ்ட லிங்கங்களையும் வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று என்கிறார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE