பக்தர்களின் பிரச்னைகளை நீக்கி வெற்றிகளை அருள்பவள் துர்காதேவி. துர்கம் என்றால் குகை. அடியார்தம் மனக்குகையில் வசிப்பவள் ஆதலால், அவள் துர்கா எனப் போற்றப்படுகிறாள். துர்காதேவி முழுமுதற் கடவுளான விநாயகருக்கு தாயாகவும், சித்தர் களின் தலைவியாகவும் தோன்றி பசி, தாகம், சோம்பல், பிரமை நீக்கி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி, வீரம் ஆகியவற்றைத் தருகிறாள். அவளை இஷ்டதெய்வமாக ஏற்று வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள், தீவினைகள் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.
வழிபட உகந்த நாட்கள்: அம்மன் வழிபாட்டுக்கு உகந்த செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்கள். ஞாயிறு ராகு காலத்தில், துர்காதேவியை தரிசிப்பதும் வழிபடுவதும் விசேஷ பலன்களை அளிக்கும்.
அர்ச்சனைப் பொருள்கள்: குங்குமம், செந்நிறப் பூக்கள்.
நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல், கனி வகைகள்.
புண்ணிய நூல்கள்: ஸ்ரீதேவி பாகவதம்.
சிறப்பு வழிபாடு:
துர்காதேவியை மட்டுமின்றி, அவளுடன் சேர்த்து ஐந்து தேவியரை வழிபட உகந்த பஞ்சமிதேவி பூஜை அதிவிசேஷமானது. சரஸ்வதி, லட்சுமி, துர்கா, சாவித்திரி, ராதா தேவியரையும் சேர்த்து ஐவரை வழிபடும் இந்த பூஜையை பஞ்சமி திதியில் செய்யவேண்டும். மணைப் பலகையில் மஞ்சள் வஸ்திரம் விரித்து அதில் ஸ்வஸ்திக் கோலமிட்டு ஐந்து தீபங்கள் ஏற்றி, அவற்றையே ஐந்து தேவியராகக் கருதி, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, திராட்சை, வாழை ஆகிய ஐவகை கனிகளைச் சமர்ப்பித்து, கீழ்க்காணும் துதிப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். இதனால், மங்கல வாழ்வும் மாங்கல்ய பலமும் பெருகும்.
வழிபாட்டு மந்திரங்கள்:
‘சர்வ மங்கள மாங்கல்யே சதா புருஷார்த்த சாதகே
சரண்யே பஞ்சசக்தி ரூபே தேவி மகாபூரணி நமோஸ்துதே
மங்களேஸ்வரியம் பாடல்களில் ஒன்று...
பார்வதியே கெளமாரி பங்கயத்தி சிற்பரையே
சீர்மிகுந்த வாடைபுனை தேவியே வார்சடையான்
வாமமதில் வாழுகின்ற மங்களத்தே மாங்கனியே
நாமமதில் தேன்சுவைக்கும் நா!
கயற்கண்ணியான அம்பாளை பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரக் காரர்கள் பூஜித்து வந்தால், அவர்களது வாழ்வில் என்றென்றும் வெற்றியே!