காய்ச்சலை குணமாக்கும் ஜுரதேவர் கோயில்

By சரவணன்

சிவபெருமான் பார்வதியுடன் ''ஜோதிஷ்கம்'' எனப்படும் மேருமலையில் அமர்ந்திருந்தார்.
அவரைச் சுற்றி கங்காதேவி, தேவகுருக்கள், நந்தி தேவர், சித்தர்கள், தபஸ்விகள், யட்சர்கள் உடனிருந்தனர். அப்போது தட்சன், தான் நடத்தும் யாகத்திற்கு தேவர்களை அழைக்க வந்தான்.

சிவனை மட்டும் அழைக்கவில்லை. தன் மகள் தாட்சாயணியைத் திருமணம் செய்து
கொடுத்திருந்தும் யாகத்திற்கு அழைக்காமல் புறக்கணித்து விட்டான் தட்சன். மருமகனாகிய ஈசனை விட தானே உயர்ந்தவன் என்ற மமதை அவனுக்கு!

இருந்தாலும் பார்வதிக்கு இதில் வருத்தம். ''உலக முதல்வரான தன் கணவருக்கு இல்லாத மதிப்பு பிற தேவர்களிடம் என்ன இருக்கிறது?'' என்ற அடிப்படையில் நியாயம் கேட்க அங்கு சென்றாள்.
அங்கு அவளை தட்சன் திட்டியதால் குண்டத்தில் விழுந்தாள்.

இதையறிந்த சிவபெருமான், பிநாகம் என்ற வில்லுடன் சிவன் யாகம் நடத்தும் இடத்திற்கு
சென்றார்.

யாக குண்டங்களை அழித்தார். சிவனின் பூதகணங்கள் சிலரை துாக்கி யாககுண்டத்தில் போட்டன.பலரை வாயில் போட்டு மென்றன.

உடனே யாகபலன் ஒரு மானின் வடிவில் வானை நோக்கி சென்றது. சிவபெருமான் அதைத் தொடர்ந்து சென்றார். அப்போது சிவனின் நெற்றியிலிருந்து ஒரு வியர்வைத்துளி நிலத்தில் விழுந்தது.
 
அதிலிருந்து அக்னி தோன்றியது.இந்த அக்னியிலிருந்து சிவந்த கண்கள், மஞ்சள் நிற மீசை, விறைப்பான தலைமுடி, முட்டை வடிவ கண், கோட்டான் போன்ற உருவம் கொண்டு கருப்பான உடையில் ''ஜ்வரம்'' என்ற பயங்கர பூதம் தோன்றியது.

அந்த பூதமும் யாகம் நடந்த இடத்துக்குச் சென்று யாகத்தை அழித்தது. வர்களையும், ரிஷிகளையும் ஓட ஓட விரட்டியடித்தது. உயிரினங்கள் எல்லாம் மிரண்டன. பூமி நடுங்கியது.

கவலையடைந்த பிரம்மா,"சிவபெருமானே! முனிவர்களும், தேவர்களும் தங்களது
கோபத்தால் கலக்கமடைகிறார்கள். தங்களை மதிக்காமல் யாகத்தை நடத்தியது தவறு தான். அவர்களை மன்னித்தருள வேண்டும்,” என்றார்.

பிரம்மனின் வேண்டுகோளை சிவன் ஏற்றார். சிவனிலிருந்து தோன்றிய ஜ்வரத்தை அப்படியே விட்டால் இந்த பூமி தாங்காது என்பதால், பல உயிரினங்களிலும் பிரித்து வைத்தார் பிரம்மா.

இதனால் தான் நமது உடல் சூடாக இருக்கிறது. இந்த ஜ்வர பூதமே ''ஜுரதேவர்'' என்ற பெயரில் கோயில்களில் இருக்கிறது.இவர் அக்னி வடிவாய் பிறந்தவர் என்பதால், இவருக்கு குளிர்ச்சியைத் தரும் மிளகை அரைத்துப் வழிபாடு செய்கிறார்கள்.

இவரது உடலில் இருந்த உஷ்ணத்தை சிவபெருமான் யானையின் மண்டையில் திணித்து மண்டைக் கொதிப்பாகவும், மனிதர்களின் உடலில் திணித்து ஜுரமாகவும், பாம்புகளின் உடலில் திணித்து
தோலே உரிந்து போகும் (சட்டை கழற்றுதல்) அளவுக்கும் என அந்தந்த உயிரினங்களின் தன்மைக் கேற்ப பிரித்தார். மனிதர்களுக்கு காய்ச்சல், தலைவலி வந்தால் ஜுரதேவருக்கு மிளகு அரைத்து பூசி அவரை குளிர்வித்தால் நமது உடலும் குளிரும் என்பார்கள்.

உடலில் சூடு அதிகமாகிவிட்டால் நாம் தளர்ந்து விடுகிறோம். கால்கள் இருந்தும் நடக்கக் கூட முடியாமல் படுத்து விடுகிறோம்.  இதனால் தான் ஜுரதேவருக்கு மூன்றாவதாக ஒரு கால் இருக்கிறது. அவரது மூன்றாவது திருவடியை வணங்கினால் ஜுரம் வந்தாலும் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

ஓம் நமசிவாய நமஹா

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE