கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர்!

By சரவணன்

ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மேலும் சிறப்பு தருவதாக அமையும்.

சிவந்த ஜடையும் பரிசுத்தமான உடலும் சிவந்த தேஜஸும் சூலம் கபாலம் உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும் நிர்வாணமாகவும் நாயினை வாஹனமாகவும் கொண்டு முக்கண்ணனாக ஆனந்த வடிவினனாக பூத பிரேதநாதனாக க்ஷேத்திரங்கள் க்ஷிப்பவராக உள்ளார் பைரவர். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE