கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையைப் போலவே இத்தலத்திலும் மூகாம்பிகைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகைக்குத் தனி சந்நிதி உள்ளது.
இக்கோயிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது.
இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற்கோபுர அமைப்பில் அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் சுக பிரசவம் அடைவதற்காகவும் வேண்டுகின்றனர்.
இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம்வந்து மூலவரை வழிபட்டால் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள், பைத்தியம் முதலிய பெருநோய்முதலியவை நீங்கி, நலன்களெல்லாம் பெற்று இன்புற்று வாழ்வர்.
இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோகஉயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றிகொடுப்பார்.
ஆண்ட விநாயகர்
கோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக்கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார்.
தேவ கணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப்பெயர் உண்டு.
அசுவமேதப் பிரதட்சிணம்
திருவிடைமருதூரில் மருதப் பெருமானை வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின்உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர்.
இந்த அசுவமேதப் பிரதட்சிணம் செய்வோர் எல்லா நலன்களும்பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும்.
ஒரு மண்டலம், அரை மண்டலம், கால்மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும்.
வலம் வருவதும் நூற்றி எட்டு, இருபத்து நான்கு,பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும்.
திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர்பெரும் பயன் அடைவர். இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதால் கிடைக்கும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.
அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம், காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. 27 நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன.
இத்தலத்தின் நான்கு திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர்,ரிஷிபுரீசுவரர்,சொக்கநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
வரகுணபாண்டியன் இத்தலத்தை அடைந்து தன்னைப் பற்றியிருந்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றான்.
பட்டினத்தார், பத்திரகிரியார், வரகுணபாண்டியன், அருணகிரிநாதர், கருவூர்தேவர் ஆகியோர் வழிபட்டு பெரும்பேறு பெற்ற பெருமையுடையது. அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.