ஆடி மாதம் வேப்பமரம் இலை ஏன்?

By தேஜஸ்

ஆடி என்பது ஒரு தேவ மங்கையின் பெயர் என்கிறது புராணங்கள். கிரகங்களின் திருவிளையாடலால் பார்வதி தேவி சிவபெருமானை விட்டு விலகி தவம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. 

இதை அறிந்து  கொண்ட ஆடி என்னும் தேவகுல மங்கை, சிவபெருமானின் தனிமையை பயன்
படுத்திக் கொண்டு பாம்பு வடிவம் எடுத்து கைலாயம் உள்ளே நுழைந்து பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகே சென்றார்.

தன் அருகில் வந்து இருப்பது பார்வதி அல்ல என்பதை அறிந்து கொண்ட ஈசன் தன் அருகில் வரும் ஆடியை சம்ஹாரம் செய்ய தன் சூலாயுதத்தை எடுத்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து தீ பொறி வந்தது அது ஆடியை புனிதமடைய செய்தது. பிறகு ஆடி ஈசனை வணங்கி தங்களின் அன்பு ஒரு நிமிடமாவது என் மீது பட வேண்டும் என்பதற்காகதான் நான் இவ்வாறு செய்தேன் என்னை மன்னித்து அருள வேண்டும் என்றாள் ஆடி..

ஆனால் சிவபெருமான், என் பார்வதி என் அருகில் இல்லாத போது அவள் போல் நீ வடிவம் கொண்டு வந்தது தவறு என்று கூறி நீ பூலோகத்தில் கசப்பு சுவையுடைய மரமாக இருப்பாய் என சாபம் அளித்தார் சிவபொருமான். 
அதற்கு ஆடி ஈசனிடம், என் பிழை பொருத்து சாப விமோசனம் தர கேட்டாள். 

அதற்கு ஈசன் நீ கசப்பு சுவையுடைய மரமாக இருந்தாலும் ஆதிசக்தியின் அருள் உனக்கு கிடைக்கும், ஆதிசக்தியை வணங்கும் போது உன்னையும் வழிபாட்டு பொருளாக பயன்படுத்துவர்.

பூலோகத்தில் உன் பெயரிலேயே ஆடி என்னும் ஒரு மாதம் உருவாகி ஆதிசக்தியை வணங்கும் மாதமாக விளங்கும் என்றார். 

ஈசனின் சாபத்தால் ஆடி என்னும் மங்கை பூலோகத்தில் வேப்பமரமாக அவதரித்து மக்களுக்கு நன்மை செய்கிறாள். ஈசனின் சாபமே ஆடிக்கு வரமாக மாறியது. 

தெய்வ அம்சம் கொண்ட வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக கருதப்படுகிறது...

ஓம் சக்தி பராசக்தி....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE