மனத்தெளிவு தரும் மந்திரபுரீஸ்வரர் சிவன் கோயில்!

By நந்தா

இராமருக்கு ஆலோசனை அளித்த சூதவனப் பெருமான், கோவிலூரில் அருள்பாலிக்கிறார். இவரைத் தரிசித்தால் குழப்பம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். ஆதி சிதம்பரம் என்று இதனை அழைப்பர்.

தல வரலாறு:
காசிப முனிவர்- வினதை தம்பதியின் மகன் கருடன். இவர் ஒருமுறை தாய்க்கு நேர்ந்த பழியைப் போக்க அமிர்தம் கொண்டு வந்தார். இதைக் கண்ட இந்திரன் பின்தொடர, கருடன் வேகமாகப் பறந்தார். அப்போது அமிர்தம் கீழே சிந்தியது அது கீழேயிருந்த சுயம்புலிங்கம் (தானாக உருவான லிங்கம்) மீது பட்டு வெண்ணிறம் அடைந்தது.

பதஞ்சலி முனிவர் இந்த சிவனுக்கு கோயில் அமைத்து வழிபட்டார். "சூதவனப் பெருமான்' என்று பெயர் சூட்டப்பட்டது.

மந்திரபுரீஸ்வரர்:
இலங்கை செல்ல பாலம் அமைப்பதற்காக வேதாரண்யம், கன்னியாகுமரி, இராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களை இராமர் பார்வையிட்டார்.

பாலப்பணி சிறப்பாக அமைய சூதவனப்பெருமானிடம் ஆலோசனை கேட்டார். இராமேஸ்வரத்தில் பாலம் அமைப்பது சிறந்தது என அவர் சொல்லவே, அங்கே பாலப்பணி சுபமாக நிறைவேறியது.
ஆலோசனை உசாவிய (கேட்ட) தலம் என்பதால் "திருவுசாத்தானம்' என்றும் இவ்வூருக்குப் பெயருண்டு.
கோயில் அமைப்பு:

ஐந்து நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் கோயில் விளங்குகிறது. அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறாள். நவகன்னியர், துர்க்கைக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
கருவறைச்சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகம், மூன்று பாதங்களுடன் உள்ளார்.‌ இவரை வணங்கினால் நோய்கள் நீங்கும்.

சூதவன விநாயகர், ராமர், வருணன், மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன.

காலனால் வீசப்பட்ட பாசக் கயிற்றினால், மேனி கருகி ஏற்பட்ட வடுக்கள் நீங்க "திருவுசாத்தானம்' என்னும் தலத்துக்குச் சென்று, அங்கு புனித தீர்த்தம் உண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு, வடுக்கள் நீங்கி மேனி எழில் பெற்று மீண்டான்..

தலவிருட்சம் மாமரம்.
விஸ்வாமித்திரருக்கு சிவன் நடனக்காட்சி அளித்த தலம் என்பதால் ஆதி சிதம்பரம் என்று பெயருண்டு.

இருப்பிடம்
திருவுசாத்தானம், நாகை மாவட்டம், திருத்துறைப் பூண்டி வட்டம், முத்துப்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் கோயிலூர் என்று அழைக்கப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE