முருகனுக்கு விளக்குகள் ஏற்றி வழிபட்டால்?

By சரவணன்

அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.‌ முருகனுக்கு செய்யப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆறாக செய்வது, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாகும். கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம்.

இந்நாட்களில் முருகனின் மந்திரங்களை உச்சரித்து, முருகனை நினைத்து உண்ணாமல் நோன்பு இருந்து குழந்தைக்காக பெண்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார்.

குறிப்பாக குழந்தைப் பேறு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும்.

சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை உடையவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய அருள் தேவை. செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், முருகனுடைய படம் நிச்சயம் இருக்கும். அந்த படத்திற்கு தம்பதியராக சேர்ந்து மாலை இட்டு, புதிய 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, முருகன் மந்திரங்களை உச்சரித்து ஒன்றாக பூஜை செய்தால் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மன ஒற்றுமை நிச்சயம் ஏற்படும்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கும்.

வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு சஷ்டி திதிகளில் முருகனை இவ்வாறு வழிபட்டு வர, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். அது மட்டுமல்லாமல் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கும், எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

கலியுகத்தில் காக்கும் கடவுளாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இந்த முருகனுக்கு பழனி என்றால் விருப்பம் தான்! அறுபடை வீடுகளில் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலை இன்றும் விஞ்ஞானிகள் வியக்கும் ஒரு அதிசயம் தான். எனவே வாரந்தோறும் முருகப் பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட்டு வாருங்கள், அனைத்தையும் அடையுங்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE