சிவன் சக்தியின் காலடியில் மிதிபடுவது போல் உள்ளது?

By தேஜஸ்

இதை பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் தாந்த்ரிக விஷயங்கள் பார்ப்போமா?

"தச மஹா வித்யை" என்று சொல்வார்கள். விஷ்ணுவின் 10 அவதாரம் போன்று ஸ்ரீ வித்யா உபாசனையில் அம்பிகைக்கு 10 விதமான அவதார நிலைகள், ஆற்றலின் உருவாக்கம் உண்டு.

கமலா, பகளா, பைரவி, தாரா, புவனேஸ்வரி,தூமாவதி, சின்னமஸ்தா, ராஜ மாதங்கி, திரிபுரா சுந்தரி,...இதில் கடைசியே காளி என்கிற மஹா காளி

நாம் எதை எதை எல்லாம் மிகவும் பவித்ரம், இது அபவித்ரம், இவள் நல்லவள், இவள் மங்களம் இல்லாதவள்..இப்படி என்னென்ன நினைக்கிறோமோ அது அத்தனையும் உடைக்க கூடிய வித்தை ஸ்ரீ வித்யா உபாசனை.

மிக கேவலம், இது பவித்ரம் இவள் மோசம், இது மாதவிடாய் - இவை எல்லாவற்றையும் உடைக்க உச்சிஷ்ட மாதங்கியை வணங்கினால் சரியான அறிவை புகட்டுகிறாள்.

மூன்று வகையான தெய்வங்களே, நம் மன கிலேசத்தை தூக்கி போடுபவர்கள் - கணபதி, கிருஷ்ணன், மாதங்கி இவர்களிடம் மன அழுக்கை கொடுத்தாலும் தூக்கி எரித்து உண்மை நிம்மதியை வழங்க கூடியவர்கள் என்பர். ராஜ மாதங்கியே லலிதா தேவியின் மந்த்ரிணி.

தூமாவதியாக அம்பிகையே கணவன் இழந்தவள் போல் இருப்பாள். அவளை காரியத்திலிருந்து விலக்கி வைக்கும் நம் அரை வேக்காடு அறிவை தெளிவாக்க அம்பிகை அந்த வடிவம் எடுத்தாள். நிலையாமையையும் இவள் உணர்த்துவான்.

பகளா வை அழைக்கையில் உன் எதிரியை செயல் இழக்க செய்பவள் (Stroke போன்று) என்று சொல்வர்.சின்னமஸ்தா தான் தன் தோழிகளுடன் காட்டில் செல்கையில் அவர்கள் விடாமல் பசி என்று கேட்கவும், தாகம் என்று கேட்கவும் தன் தலையை தானே வெட்டி குருதி நீர் கொடுத்தார் என்பர். இதன் சூக்ஷ்ம பொருள் ரஜோ குணம், தமோ குணமான தோழிகளுக்கு தன்னை வெட்டி அடக்கினார் (தான் என்கிற ஈகோ)

இதில் சின்னமஸ்தா கொடிய தோஷங்களுக்கு மருந்தானவள் . நரசிம்ஹனை போன்ற பலம் என்று சொல்வர்.மிகவும் பெரிய விஷயங்கள் பொதிந்த 10 மகா வித்யா பற்றி இணையத்தில் படியுங்கள்.

இதன் கடைசி நிலையே காளி! மோக்ஷம் அளிப்பவள். நிர்வாணம் என்று எதை நினைக்கிறாய்?, என்று சிரிக்கிறார்? எதை உன்னுடையது என்று நினைக்கிறாய்? என்று எலும்பு கூடு மாலையை போட்டு நடனமாடுகிறாள் ...! ஏன் பயம் என்று கேட்கிறாள்? என்னை நினைத்து உன் ஸ்வரூபத்தை உணர் ..நீ இந்த உடம்பா? உலக அழகா? உண்மையில் நீ யார்? எல்லா மாயையையும் உன்னையே நீ நல்லவன் என்று நினைப்பதையும் நினைத்து சிரிக்கிறேன்...இந்த நீ யார்?

இதனை தேடும் அறிவாகவும், ஆற்றலாகவும், ஊற்றாகவும் , குண குன்றாகவும், பாசம் மிகு அன்னை ஆகவும், அறியாமை போக்குபவளாகவும், மோக்ஷம் தருபவளுமான அன்னையே பாதை, வழி, தோற்றம் மறைவு அந்த குண்டலினி எனும் சக்திக்கு. அவள் எழும்பி இப்படி நடனம் புரிந்தால் (awareness) மட்டுமே சஹஸ்ரஹாரத்தில் உண்மை அறிய முடியும் என்கிற விளக்கமே அன்னை இப்படி நின்று ஆடுவது போன்றது.

மேலும் நான் என்கிற அகந்தை அழிவதை காட்டவும், எலும்பு கூடாக தலைகளை அன்னை அணிந்துள்ளார். நம் சின்ன அறிவு, சுயம், அகந்தையை அழித்த அன்னை அதை மாலையாய் போட்டுகொண்டு உண்மையை நோக்கி வீறுடன் சென்று அந்த சிவம் என்கிற பேரானந்த நிலையை அடைய உதவும் அழகே இந்த முறை.

நான் சொல்லும் விளக்கங்கள் நம் சம்பிரதாயத்தில், ராஜ யோகத்தில் வரும். இதனை குருவை கொண்டு உணரலாம். போன சில ஜன்மங்களில் நீங்கள் செய்திருந்தால் தானாக ஓரளவு உணரலாம்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE